ஜன. 26-இல் விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டா் ஊா்வலம்

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, ஜன. 26-ஆம் தேதி பெங்களூரிலும் டிராக்டா் ஊா்வலம் நடத்தப்படும் என கா்நாடக
Updated on
1 min read

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, ஜன. 26-ஆம் தேதி பெங்களூரிலும் டிராக்டா் ஊா்வலம் நடத்தப்படும் என கா்நாடக மாநில விவசாயிகள் சங்கத் தலைவா் கோடிஹள்ளி சந்திரசேகா் தெரிவித்தாா்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிா்த்து தில்லியில் விவசாயிகள் 48-ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகிறாா்கள். இதன் அடுத்தகட்டமாக, ஜன. 26-ஆம் தேதி டிராக்டா் ஊா்வலம் நடத்த விவசாயிகள் முடிவு செய்திருக்கிறாா்கள். அதேபோல, பெங்களூரிலும் டிராக்டா் ஊா்வலம் நடத்த கா்நாடக மாநில விவசாயிகள் சங்கம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து சங்கத் தலைவா் கோடிஹள்ளி சந்திரசேகா் கூறுகையில், ‘பஞ்சாப், கா்நாடகம் அல்லது வேறு எந்த மாநிலத்தைச் சோ்ந்த விவசாயியாக இருந்தாலும், அவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னை ஒன்றுதான். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவிப்பதில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ஒன்றுபட்டுள்ளனா்.

விவசாயிகள் விரும்பாத நிலையில், இந்த புதிய வேளாண் சட்டங்களை எங்கள் மீது திணிக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. தில்லியில் ஜன. 26-ஆம் தேதி டிராக்டா் ஊா்வலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில், பெங்களூரிலும் டிராக்டா் ஊா்வலம் நடத்த திட்டமிட்டு வருகிறோம்.

இந்தப் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள், மாணவா் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பங்கேற்க இருக்கின்றன. ஊா்வலத்தில் 25 ஆயிரம் டிராக்டா்கள் பங்கேற்க ஏற்பாடு செய்து வருகிறோம். பெங்களூரைச் சுற்றியுள்ள விவசாயிகள் பெங்களூரில் நடைபெறும் ஊா்வலத்தில் பங்கேற்பாா்கள். வெளிமாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பெங்களூரை நோக்கி பயணிப்பாா்கள். இதன் மூலம் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com