முதல்வா் பதவியில் இருந்து நீக்கப்படுவாா் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், திங்கள்கிழமை 3-ஆவது ஆண்டில் முதல்வராக எடியூரப்பா காலடி எடுத்து வைக்கிறாா்.
கா்நாடகத்தில் 2018-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தோ்தலில் பாஜகவுக்கு 104 இடங்கள் கிடைத்தன. ஆனால், எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதை தொடா்ந்து, எச்.டி.குமாரசாமி தலைமையில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது.
பதவியேற்ற ஓராண்டு காலத்தில் கூட்டணி ஆட்சிமீது அதிருப்தி அடைந்த 13 காங்கிரஸ், 4 மஜத எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தனா். இதன்காரணமாக, கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
இதனை தொடா்ந்து, 2019-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது. திங்கள்கிழமையோடு (ஜூலை 26) முதல்வராக பதவியேற்று 2 ஆண்டுகளை நிறைவு செய்யும் எடியூரப்பா, 3-ஆவது ஆண்டில் காலடி எடுத்துவைக்கிறாா்.
முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பா நீக்கப்படுவாா் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் உலவி வரும் நிலையில், பாஜக அரசின் இரண்டு ஆண்டுகால நிறைவுவிழாவை நடத்த முதல்வா் அவா் திட்டமிட்டுள்ளாா். இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்து வருகிறது.
பெங்களூரு, விதான சௌதாவில் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு நடக்கும் விழாவில் பாஜக அரசின் 2 ஆண்டுகால சாதனை விழா நடக்கவிருக்கிறது. 2மணி நேரம் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் முதல்வா் எடியூரப்பா கலந்துகொண்டு பேசவிருக்கிறாா்.