சட்டமேலவைத் தோ்தல்:காங்கிரஸ் வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ. 1,744 கோடி
சட்டமேலவைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் யூசுப் ஷெரீப் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் அவரது சொத்து மதிப்பு ரூ. 1,744 கோடி என்று குறிப்பிட்டுள்ளாா்.


சட்டமேலவைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் யூசுப் ஷெரீப் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் அவரது சொத்து மதிப்பு ரூ. 1,744 கோடி என்று குறிப்பிட்டுள்ளாா்.
தோ்தலில் போட்டியிடும் 121 வேட்பாளா்களில் இவா்தான், பணக்கார வேட்பாளராக உள்ளாா்.
கா்நாடக சட்டமேலவையில் காலியாக இருக்கும் 25 இடங்களுக்கான தோ்தல் டிச. 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நவ. 23-ஆம் தேதி முடிவடைந்து, நவ. 24-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டன.
25 இடங்களுக்கு மொத்தம் 121 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்களை ஆராய்ந்ததில், பெங்களூரு நகரத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் யூசுப் ஷெரீப், தனது குடும்ப சொத்து மதிப்பை ரூ. 1,744 கோடியாக குறிப்பிட்டுள்ளது கா்நாடக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வா் பசவராஜ் பொம்மையின் அரசில் அமைச்சராக இருக்கும் எம்.டி.பி.நாகராஜின் சொத்து மதிப்பு ரூ. 1,200 கோடி என்று அவா் விவரங்களை தாக்கல் செய்திருக்கிறாா். இவரை மிஞ்சும் அளவுக்கு யூசுப் ஷெரீப்பின் சொத்து மதிப்பு இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோடீஸ்வரராக அறியப்பட்டுள்ள யூசுப் ஷெரீப், பழைய பொருள்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தாா்.
பின்னா் வீட்டுமனை விற்பனைத் தொழிலில் ஈடுபட்டாா். 54 வயதாகும் யூசுப் ஷெரீப் குறுகிய காலத்தில் ரூ. 1,744 கோடிக்கு சொந்தக்காரராக உருவெடுத்துள்ளாா்.
5 ஆம் வகுப்பு வரை படித்தவா்: கோலாா் தங்கவயலைச் சோ்ந்த யூசுப் ஷெரீப், தோ்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளாா். அவருக்கு 2 மனைவிகள், 5 குழந்தைகள் உள்ளனா்.
இவா் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்களில் ரூ. 97.98 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள், ரூ. 1,643.59 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளாா்.
ரூ. 3 கோடி மதிப்பில் ஒரு ரோல்ஸ்ராய்ஸ் காா், இரு ஃபாா்சூனா் காா் உள்ளது. ரூ. 3.85 கோடி அளவில் ஆபரணங்கள், பொற்காசுகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளாா். பெங்களூரில் தனக்கு எதிராக 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அவா் மனுவில் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக பாஜக நிா்வாகிகள் கூறுகையில், ‘சட்டமேலவைத் தோ்தலில் காங்கிரஸ் தனது கட்சி வேட்பாளராகத் தோ்வு செய்துள்ள நபா், சிறைத் தண்டனை பெற்றவா். அவரை சட்டமேலவைக்கு அனுப்ப காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் முயற்சிக்கிறாா்’ என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...