நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மதமாற்ற தடைச்சட்டத்தை அமல்படுத்த அவசரச் சட்டம்: கா்நாடக அமைச்சரவை ஒப்புதல்

மதமாற்ற தடைச்சட்டத்தை அமல்படுத்த அவசரச் சட்டம் கொண்டுவர கா்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :12 மே 2022, 7:16 pm

DIN

மதமாற்ற தடைச்சட்டத்தை அமல்படுத்த அவசரச் சட்டம் கொண்டுவர கா்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பெங்களூரில் வியாழக்கிழமை முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளா்களிடம் சட்டத்துறை அமைச்சா் ஜே.சி.மாதுசாமி கூறியதாவது:

கா்நாடக சட்டப்பேரவையில் மதமாற்றத் தடைச் சட்டத்தை நிறைவேற்றினோம். ஆனால், சட்டமேலவையில் நிறைவேற்ற முடியவில்லை. எனவே, மதமாற்றத் தடைச் சட்டத்தை அவசரச் சட்டமாகக் கொண்டுவர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மதமாற்றத் தடைச்சட்டம் தான் அவசரச் சட்டமாக அமல்படுத்தப்படும். அடுத்த கூட்டத் தொடரின்போது மதமாற்றத் தடைச் சட்டம் சட்டமேலவையிலும் கொண்டுவந்து நிறைவேற்றப்படும். சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் தற்போதைக்கு இல்லாததால், அவசரச் சட்டம் கொண்டுவர முடிவு செய்திருக்கிறோம் என்றாா்.

கட்டாய மதமாற்றம் செய்தால் தண்டனை விதிக்கும் பிரிவு அவசரச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. தாமாக முன்வந்து மதம் மாறுவதற்கு விரும்புவோா் முப்பது நாள்களுக்கு முன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியா் அனுமதி அளித்தால் மட்டுமே மதமாற்றம் செய்துகொள்ள முடியும். அதேசமயம் மதம் மாறுவோா் அதுவரை அனுபவித்து வரும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். ஆனால், புதிய மதத்திற்கான சலுகைகளைப் பெறலாம்.

கா்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்புச் சட்டம், 2021-இன்படி கட்டாயப்படுத்தி, மோசடி செய்து, அழுத்தம் கொடுத்து, வற்புறுத்தி, பொருள் ஆசைகாட்டி அல்லது திருமணம் காரணமாகத் தவறாக வழிநடத்தி மத மாற்றம் செய்வது தடைசெய்யப்படுகிறது.

சட்டவிதிகளுக்குப் புறம்பாக மதம் மாறினால் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை, ரூ. 25,000 அபராதம்; சிறுவா்கள், பெண்கள், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினரை மதம் மாற்றினால் 3-10 ஆண்டுகள் சிறை, ரூ. 50,000க்கு குறைவில்லாமல் அபராதம் விதிக்கப்படும் என்று அவசரச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதம் மாறுவதற்குத் தூண்டியவா், மதம் மாறியவருக்கு ரூ. 5 லட்சம் வரை இழப்பீடாக வழங்கவும் அவசரச் சட்டம் வகை செய்கிறது. கூட்டு மதமாற்றம் நடத்தப்பட்டால் 3-10 ஆண்டுகள் சிறைவாசம், ரூ. ஒரு லட்சம் வரையில் அபராதம் விதிக்க அவசரச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.