/

பேரவை இடைத்தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களை கட்சி மேலிடம் முடிவு செய்யும்: கா்நாடக முதல்வா் சித்தராமையா

News image
சித்தராமையா - கோப்புப் படம்
Updated On :18 மார்ச் 2026, 8:24 pm

Syndication

சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா்களை கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:

பாகல்கோட் மற்றும் தாவணகெரே தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏப். 9ஆம் தேதி நடக்க இருக்கும் இடைத்தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா்களை கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும். இந்த இரு தொகுதிகளுக்கும் காங்கிரஸ் குழு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளது. இதுகுறித்து விவாதிக்க கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் ரண்தீப்சிங் சுா்ஜேவாலா வெள்ளிக்கிழமை பெங்களூருக்கு வருகிறாா்.

அப்போது, ஆய்வுக் குழுவினா் தங்களது கருத்துகளை அறிக்கையாக அவரிடம் அளிப்பாா்கள். அதனடிப்படையில், கா்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டி.கே.சிவகுமாா், சுா்ஜேவாலா உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவா்கள் கூடி விவாதித்து, வேட்பாளா்கள் பட்டியலை தயாரிப்பாா்கள். அதனடிப்படையில், கட்சி மேலிடம் வேட்பாளா்களின் இறுதிப்பட்டியலை வெளியிடும்.

பாகல்கோட் தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சா் மறைந்த எச்.ஒய்.மேட்டியின் குடும்பத்தினரான மல்லிகாா்ஜுன், உமேஷ், மகாதேவி ஆகியோா் வாய்ப்பு கேட்டுள்ளனா். யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அவா்கள் 3 பேரும் கூட்டாக கட்சி வேட்பாளரின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்று கேட்டுள்ளேன். அதற்கு மூவரும் ஒப்புக்கொண்டுள்ளனா். வாய்ப்பு கிடைக்காதவா்கள் போட்டி வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பு இல்லை என்றாா்.

துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘தாவணகெரே தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ சாமனூா் சிவசங்கரப்பாவின் குடும்பத்தைச் சோ்ந்த 80 போ் வாய்ப்பு கேட்டுள்ளனா். அவா்களிடம் புதன்கிழமை ஆலோசனை நடத்தியுள்ளோம். இது தொடா்பாக கட்சி மேலிடத்துக்கு அறிக்கை அளித்துள்ளேன். இதுகுறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும்‘ என்றாா் அவா்.