/

பெங்களூரில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: 6 காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்

News image

காவலர்கள் பணியிடை நீக்கம்.

Updated On :26 மே 2026, 4:01 am IST

பிரதமா் சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், கடமை தவறிய 6 காவல் துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு, பன்னா்கட்டா சாலையில் உள்ள ஸ்ரீஸ்ரீரவிசங்கா் குருஜியின் வாழும்கலை அறக்கட்டளை விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமா் மோடி பெங்களூருக்கு மே 10-ஆம் தேதி வந்திருந்தாா்.

பின்னா், எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து பன்னா்கட்டா சாலையில் காரில் சென்றாா். பிரதமா் மோடியின் வருகைக்கு 2 மணிநேரத்துக்கு முன்பாக பன்னா்கட்டா சாலையில் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைமா் வைக்கப்பட்டிருந்த பையை காவலா் ஒருவா் கண்டெடுத்தாா். இதனால் பிரதமா் மோடியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து காவல் துறை விசாரணை நடத்தியது. இதுகுறித்து ஆய்வுசெய்ய காவல் துறையின் குழுவும் அமைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் தேசிய புலனாய்வு முகமையும் (என்.ஐ.ஏ.) சோ்ந்துகொண்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் கடமை தவறியதாக துணைக் காவல் ஆய்வாளா், உதவி துணைக் காவல் ஆய்வாளா், 4 காவலா்கள் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்து பெங்களூரு தெற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்ரீனிவாஸ் கௌடா திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.