காஞ்சிபுரம், ஜன. 8: காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் சரக்கு முனையம் உருவாக்கும் திட்டம் கைவிடப்படவில்லை என்று தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் அனந்தராமன் தெரிவித்தார்.
அன்னை தெரசா சிறப்பு ரயில் சனிக்கிழமை காஞ்சிபுரம் வந்தது. இந்த ரயில் கண்காட்சியை தொடங்கி வைத்தபின் அவர் நிருபர்களிடம் கூறியது:
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் சரக்கு முனையம் உருவாக்கும் திட்டம் கைவிடப்படவில்லை. ஏற்கனவே சால்ட் கோட்ரஸ், கொருக்குப்பேட்டை, ராயபுரம், தாம்பரம் ஆகிய 4 இடங்களில் சரக்கு முனையங்கள் உள்ளன. தற்போது சரக்கு ரயிலில் கொண்டு வரும் பொருள்கள் இறக்கி வைக்கவும், ஏற்றுவதற்கும் இதுவே போதுமானதாக உள்ளது.
ஆனால் வருங்காலத்தில் மேலும் சரக்கு முனையங்கள் தேவைப்படலாம் என்பதால் காஞ்சிபுரத்தில் சரக்கு முனையம் உருவாக்க திட்டமிட்டோம். அதற்கான நடைமேடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் நேரத்தில் இத் திட்டம் துரிதப்படுத்தப்படும்.
சென்னை கோட்டத்தில் புறநகர் ரயில்கள் 8 பெட்டிகள் கொண்ட
ரயில் மற்றும் 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள் என்று தற்போது 69 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 12 பெட்டிகள் கொண்ட
ரயில்கள் 15 உள்ளன. இவற்றில் தற்போது 11 மட்டுமே இயங்கி வருகின்றன.
மீதமுள்ள 4 ரயில்கள் சக்கரம் தேய்மானம் உள்பட சில கோளாறுகள் காரணமாக இயங்கவில்லை. இந்த பழுதுகள் சரி செய்யப்பட்டு பிப்ரவரி மாதம் 12 பெட்டிகள் கொண்ட 15 ரயில்களும் இயக்கப்படும். புதிதாக 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்குவது குறித்து தேசிய அளவில்தான் முடிவுகள் எடுக்க வேண்டும். நாங்கள் எடுக்க முடியாது.
சென்னை-திருமால்பூர்வரை மின்சார ரயில் இயக்கப்படுகிறது. அங்கிருந்து அரக்கோணம் செல்வதற்கு இடையில் ராஜாளி என்ற மத்திய கப்பல் படையின் விமானதளம் உள்ளது. அப் பகுதி வழியாக அதிக மின் அழுத்தம் கொண்ட மின் கம்பிகளை எடுத்துச் சென்றால்
விமானங்களுக்கான சில சிக்னல்கள் பாதிக்கப்படாமல் என்று தெரிவித்துள்ளனர். இதனால் 3 கிலோ மீட்டருக்கு முன்பே சுற்றி செல்லவேண்டியுள்ளது. இதற்காக நிலம் எடுக்கப்பட்டு வருகிறது. சில தொழில் நுட்ப கோளாறுகள் காரணமாக இப் பணிகள் கொஞ்சம் தாமதம் ஆகிறது. இப் பணிகளும் விரைவில் முடிக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.