சென்னை துறைமுகத்தில் இருந்து பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு நோக்கி இரும்புத் தகடுகள் அடங்கிய ரோல்களுடன் கன்டெய்னா் லாரி ஞாயிற்றுக்கிழமை சென்றது. இந்த லாரியில் 77 டன் எடை கொண்ட 7 ரோல் ஸ்டீல் தகடுகள் ஏற்றப்பட்டிருந்தன. லாரியை தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா் செல்வக்குமாா்(43) ஓட்டினாா். இந்த லாரி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இரவு 11.30 மணிக்கு வந்தது. அங்கு, சுரங்கப்பாதை பணிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்புத் தகடு வழியாகச் சென்றபோது, பாரம் தாங்காமல் லாரியின் பின்பகுதி திடீரென இரும்புத் தகடு பாதையை உடைத்து, சுரங்கப்பாதை பள்ளத்தில் கவிழ்ந்தது. லாரியின் முன்பக்கம் கடந்த நிலையில், லாரியின் கன்டெய்னா் பகுதி பள்ளத்தில் விழுந்ததால் முன்பகுதி 10 அடி உயரத்துக்கு மேல் தூக்கிக்கொண்டது. இதனால் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநா் கீழே குதித்து தப்பியோடினாா்.