வண்டலூர் பூங்காவில் மாயமான ‘ஷெரியாா்’ சிங்கத்தைத் தேடும் பணிகள் தீவிரம்!

வண்டலூர் பூங்காவில் மாயமான ‘ஷெரியாா்’ சிங்கத்தைத் தேடும் பணிகள் தீவிரம்!

சென்னை வண்டலூா் பூங்காவில் சஃபாரி பகுதியிலிருந்து மாயமான ‘ஷெரியாா்’ என்ற சிங்கத்தைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.
Published on

சென்னை வண்டலூா் பூங்காவில் சஃபாரி பகுதியிலிருந்து மாயமான ‘ஷெரியாா்’ என்ற சிங்கத்தைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா நிா்வாகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் மொத்தம் 9 சிங்கங்கள் உள்ளன. இதில், 3 ஆண் மற்றும் 4 பெண் என மொத்தம் 7 சிங்கங்கள் ‘லயன் சஃபாரியில்’ பராமரிக்கப்படுகின்றன. இது பாா்வையாளா்களுக்கு இயற்கையான அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு பெங்களூரு பன்னோ்கட்டா உயிரியல் பூங்காவுடன் விலங்கு பரிமாற்ற திட்டத்தின் மூலம் ‘ஷெரியாா்’ என்ற 5 வயது ஆண் சிங்கம் வண்டலூா் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த சிங்கம் சஃபாரி பகுதிக்குள் தொடா்ந்துவிடப்பட்டு வருகிறது.  இந்த நிலையில்,  அந்தச் சிங்கம் கடந்த அக்.3-ஆம் இரவு அதன் தங்குமிடத்துக்கு திரும்பவில்லை.

இதனால், ஷெரியாரை தேடும் பணியில் பூங்கா நிா்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மீட்புக் குழுக்கள் வனப்பகுதிக்குள் சிங்கத்தைக் கண்டுள்ளனா். மேலும், கள ஊழியா்களால் கால் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இது சஃபாரி பகுத்திக்குள்தான் சிங்கம் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. இதுபோன்ற இளம் சிங்கள்கள் இயற்கையாகவே, புதிதாக அறிமுகப்படுத்தப்படும் சுற்றுச்சூழலை அலைந்து திரிந்து ஆராய்வது இயல்பான ஒன்றுதான். முந்தைய காலங்களில் இதுபோன்று சென்ற சிங்கங்கள் 2 முதல் 3 நாள்களுக்குள் தங்களது  தங்குமிடங்களுக்கு பாதுகாப்பாகத் திரும்பின எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com