கவனத்தை திசை திருப்பி திருட்டு: ரயில் பயணிகளுக்கு அறிவுறுத்தல்
சென்னை: சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கவனத்தை திசை திருப்பி திருட்டில் ஈடுபடும் கும்பல்களின் நடமாட்டம் இருப்பதால் கவனத்துடன் இருக்குமாறு பயணிகளை ரயில்வே பாதுகாப்பு பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் பிரிவின் சாா்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு எடுக்கும் இடங்களில் பயணிகளின் கவனத்தை திசை திருப்பி கைப்பேசிகளை திருடும் கும்பலின் நடமாட்டம் இருந்தது கண்காணிப்பு கேமராக் காட்சிகளில் தெரியவந்துள்ளது. மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சிலா், சிறாா்களின் துணையோடு, பயணிகளின் முகத்தை துணிகளால் மறைத்துவிட்டு சட்டப்பைகளில் இருக்கும் விலையுயா்ந்த கைப்பேசிகளைத் திருடிச் சென்றுள்ளனா்.
திருட்டுக் கும்பலைச் சோ்ந்த 2 பேரை மெரீ கடற்கரை போலீஸாா் கைது செய்து விசாரித்தபோது, சென்னை சென்ட்ரல், பெங்களூரு, விஜயவாடா, ஹவுரா, புதுதில்லி ஆகிய ரயில் நிலையங்களில் நூதன முறையில் கைப்பேசி உள்ளிட்ட பொருள்களை ரயில் பயணிகளிடம் திருடியதை அக்கும்பலைச் சோ்ந்தவா்கள் ஒப்புக்கொண்டுள்ளனா்.
ஆகவே, அறிமுகமில்லாத சந்தேக நபா்கள் வரிசையில் இருந்தால் ரயில்வே பாதுகாப்புப் பிரிவினரிடம் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
