

செங்கல்பட்டில் 200 ஆண்டுகள் பழைமையான பஞ்சலோக விநாயகர் சிலையை போலீஸார் கைப்பற்றினர். சிலை திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த மே மாதம் 28 ஆம் தேதி அன்று நள்ளிரவு செங்கல்பட்டு அருகாமையில் உள்ள இளந்தோப்பு பகுதியில் பழமைவாய்ந்த விநாயகர் கோயிலில் இரண்டு அடி உயரமுள்ள பஞ்சலோக சிலை திருடுபோனதாக அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு தாலுக்கா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில், ஆய்வாளர் ஏழுமலை தலைமையிலான தனிப்படையினர் காணாமல் போன சிலையை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுவந்தனர்.
இந்த நிலையில், செங்கல்பட்டு இளந்தோப்பு பகுதியில் வசித்துவரும் சதீஷ்குமார் ( 29) என்பவரை மையமாக கொண்டு பழைமையான சிலை ஒன்று விற்பனைக்கு பேரம் பேசுவதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார் சதீஷ்குமாரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், மல்ரோசாபுரம் பகுதியில் உள்ள ஏரியில் விநாயகர் சிலையை புதைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து ஏரியில் புதைக்கப்பட்டிருந்த பஞ்சலோக விநாயகர் சிலையை போலீஸார் மீட்டனர்.
மேலும் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில்:- கடந்த மே மாதம் செங்கல்பட்டு இளந்தோப்பு பகுதியில் வசித்துவரும் சதீஷ்குமார் (29), செங்கல்பட்டு மேட்டுத்தெருவைச் சேர்ந்த விக்கி (எ) விக்ரம்(27), மறைமலை நகர், மல்ரோசாபுரம் கிராமதைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன்( 41) ஆகிய மூவரும் குடிபோதையில் இளந்தோப்பு பகுதியில் உள்ள விநாயர் கோயிலில் பஞ்சலோக விநாயகர் சிலையை திருடிச்சென்று பின்னர் அச்சிலையை மல்ரோசாபுரம் ஏரியில் புதைத்து வைத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக ரூ,5 லட்சத்துக்கு விற்க முயன்றுள்ளனர். இதனை அறிந்த போலீஸார் அவர்கள் மூவரும் கைது செய்து சிலையை மீட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சிலை கடத்தல் பின்னனி குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.