செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் பகுதியில் மாற்று மின்சாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேட்டரி வெடித்து விபத்து ஏற்பட்டது.
இதனால் கரும்புகை சூழ்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் நோயாளிகள் அலறியடித்து கொண்டு தங்களது உயிரைக் காத்துக்கொள்ள மருத்துவமனையை விட்டு வெளியே ஓடினர்.
இதையும் படிக்க | தமிழகத்தில் இன்று மேலும் 1,724 பேருக்கு கரோனா
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் அமைந்துள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் பிரிவில் ஸ்கேன் எடுப்பதற்காக இரண்டு நோயாளிகள் சென்றுள்ளனர். அப்போது எம்ஆர்ஐ ஸ்கேனிங் மிஷின் அருகில் பொருத்தப்பட்ட பேட்டரிகள் திடீரென ஒன்றன்பின் ஒன்றாக வெடித்துள்ளது.
இதனால் அதிர்ந்துபோன நோயாளிகள் வெளியே ஓடி வந்த சில நிமிடங்களிலேயே மருத்துவமனை தரைதளம் முழுவதும் தீ பரவி கரும்புகை சூழ்ந்தது.
மருத்துவமனையில் தீ விபத்தின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு போதுமான தீயணைப்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தால் புகையை கட்டுக்குள் கொண்டுவர கடும் சிரமம் ஏற்பட்டது.
மேலும் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அந்தக் கட்டிடத்தில் உள்ள அனைத்து நோயாளிகளையும் அவசர அவசரமாக வெளியேற்றினர். மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துக்குமரன், மருத்துவ கண்காணிப்பாளர் நமச்சிவாயம், துணைக் கண்காணிப்பாளர் மோகன் குமார், மருத்துவ நிலைய உதவி அலுவலர் கந்தன் கருணை ஆகியோர் உடனடியாக வந்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.
உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 3 மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.