செங்குன்றம் அடுத்த மாதவரம் பால்பண்ணையில் 5ந்தேதி செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் சாலையோரம் ரத்தக் காயங்களோடு கால் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக ஒரு ஆண் பிணம் கிடந்தது. அவரை கொலை செய்து விட்டு பிணத்தை சாலையோரம் வீசிவிட்டு கொலையாளிகள் தப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் போலஸார் விசாரித்து வருகின்றனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
செங்குன்றம் அடுத்த மாதவரம் பால்பண்ணை அருகே மாத்தூர் அப்பல்லோ ஆம்ஸ்ட்ராங் நகர் பகுதியில் பயங்கர வெட்டுக் காயத்தோடு ஆண்பிணம் ஒன்று 200 அடி சாலையோரம் கிடந்தது.
கொலை செய்யப்பட்ட அந்த ஆணின் கால்கள் கட்டப்பட்டு இருந்தது. நிர்வாணமாக ரத்த வெள்ளத்தில் கிடந்தார். வயது 45 இருக்கும். உடனே போலீஸாக்கு தகவல் தெரிவித்தனர். மாதவரம் பால்பண்ணை போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
தலையில் பலத்த வெட்டுக்காயம் காணப்பட்டது. உடனடியாக அந்த பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்டு கிடந்த ஆசாமி வட இந்தியாவை சேர்ந்தவர் போல காணப்பட்டார். அவர் உடலில் துணி ஏதும் இல்லை. சரமாரியான வெட்டுக்காயம் காணப்பட்டது.
அந்த ஆசாமியை கடத்திச் சென்று கொலை செய்து விட்டு வாகனத்தில் கொண்டு வந்து அந்த இடத்தில் வீசி இருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸார் மத்தியில் எழுந்துள்ளது.
உடல் நிர்வாணமாக கிடந்ததை பார்க்கும்போது பெண் தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம். அல்லது இதன் பின்ணனியில் ஓரின சேர்க்கை சம்பவம் இருக்கக்கூடும் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரிக்கிறார்கள்.
கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யார் என்பதை அறிய தனிப்படை போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். யாராவது அந்த பகுதியில் காணாமல் போய்விட்டதாக புகார் ஏதும் காவல் நிலையத்தில் பதிவாகி உள்ளதா என்றும் முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டது.
கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த அந்த ஆசாமியைப் பற்றிய முழு விபரம் தெரிந்த பிறகுதான் இந்த கொலைக்கான உண்மையான காரணம் வெளிச்சத்திற்கு வரும் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள். இந்த சம்பவம் மாதவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.