இந்தியாவை மொகலாயர்கள் ஆட்சி செய்தபோது, அவர்களின் நிர்வாக வசதிக்காக, பாரசீக (பார்சி) மொழியையும் உருது மொழியையும் ஆட்சி மொழியாகப் பயன்படுத்திவந்தனர். அதில் பெரும்பாலானவற்றை சுதந்திர இந்தியாவில் மாற்றம் செய்தாலும், வருவாய்த் துறையில் எந்த மாற்றமும் இல்லாமல் அரபி, பார்சி, உருதுச் சொற்களே பின்பற்றப்படுகின்றன.
இந்தியாவில் 3 வகை ஆண்டு முறைகள் நடைமுறையில் உள்ளன. காலண்டர் ஆண்டு ஜனவரி1 முதல் டிசம்பர் 31 வரை கணக்கிடப்படுகிறது. நிதியாண்டு (வங்கிக் கணக்கு ஆண்டு) ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை கணக்கிடப்படுகிறது. வருவாய்த் துறையில் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை கணக்கிடப்பட்டு பசலி ஆண்டு என்ற உருதுச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். பசலி என்றால் அறுவடைக்காலம் என்று பொருள். உதாரணமாக நடப்பு ஆண்டு 2016ஐ, 1406-ஆம் பசலி ஆண்டு என்று குறிப்பார்கள். வருவாய்த் துறை ஆவணங்களில் 1406-ஆம் பசலி ஆண்டு என்றே, பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களில் இருக்கும்.
வருவாய்த் துறையில் குறிப்பிடப்படும் தாசில்தார் என்பது அரபிச் சொல்லாகும். குறுவட்டத்திற்கு பிர்கா என்றும், மாவட்டத்திற்கு ஜில்லா என்றும், வருவாய் தீர்வாயம் என்ற தமிழ்ச்சொல்லுக்கு ஜமாபந்தி என்றும், பயிர் சாகுபடிக் கணக்கு என்பதற்கு அஜ்ஜும்யிஷ் என்றும் அழைக்கிறார்கள்.
இதேபோல ஏராளமான பிறமொழிச் சொற்கள் வருவாய்த் துறையில் புழக்கத்தில் உள்ளன. தமிழகத்தை திராவிட இயக்கங்கள் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தும் வருவாய்த் துறையில் மொகலாயர் காலச் சொற்களே ஆட்சி செய்கின்றன. வருவாய்த் துறை ஆவணங்களையும் சொற்களையும் தமிழ்ப்படுத்துமாறு தமிழ் ஆர்வலர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.