குடிநீர் கேன் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

குடிநீர் கேன் மீது விதிக்கப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த குடிநீர் கேன் உரிமையாளர்கள்
குடிநீர் கேன் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
Published on
Updated on
1 min read

குடிநீர் கேன் மீது விதிக்கப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த குடிநீர் கேன் உரிமையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருந்து வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் செயல்படும் 370 தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மூலம் தினமும் 1.80 கோடி லிட்டர் குடிநீர் கேன்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.
"ஜிஎஸ்டி வரிவிதிப்பில் குடிநீர் கேனுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் கேன் வர்த்தகம் பெரிதும் பாதிப்படையும். எனவே குடிநீர் கேன் மீதான வரியை நீக்க வேண்டும்' என கிரேட்டர் தமிழ்நாடு தூய குடிநீர் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் தனியார் கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளன. இதனால், குடிநீர் கேன் விநியோகம் படிப்படியாகக் குறைந்தது.
இதுகுறித்து கேன் குடிநீர் தயாரிப்பாளர் சங்கத்தின் நிறுவனர்கள் முரளி, ஷேக்ஸ்பியர் ஆகியோர் கூறியது:
குடிநீர் கேன்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. குடிநீர் ஆலைகளுக்கு ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நீர் எடுப்பதை அதிகாரிகள் தடுத்து வருகின்றனர்.
ஏற்கெனவே நிலத்தடிநீர் குறைந்து வருகிறது என்ற காரணத்தைக் கூறி மாதவரம் அருகே உள்ள கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களை மூட வைத்தனர். தற்போது மேலும் பல நிறுவனங்களை மூடுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
குடிநீர் கேன்கள் மீது 18 சதவீத வரி விதிப்பது, தனியார் குடிநீர் ஆலைகளை மூடச்சொல்வது போன்ற காரணங்களால் இந்தத் தொழில் முற்றிலுமாக முடங்கிவிடும்.
எனவே எங்களது இரு முக்கியக் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை மூன்று மாவட்டங்களிலும் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளோம் என்றனர்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்துவரும் பெரும்பாலான மக்கள், தங்கள் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய கேன்களையே சார்ந்திருக்கும் நிலையில் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com