தீபாவை ஏமாற்ற நடந்த நாடகம்?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா வீட்டுக்கு, போலி வருமான வரித்துறை அதிகாரி வந்தது, அவரை ஏமாற்றுவதற்காக நடந்த நாடகம் என்பது போலீஸாரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
போலி வருமான வரித்துறை அதிகாரியாக தீபா வீட்டுக்கு சோதனையிட வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரிடம் நடத்திய விசாரணையில், தீபாவின் கணவர் மாதவன் ஏற்பாட்டின் பேரிலேயே அவர் வந்தது தெரியவந்துள்ளது.
தீபாவை ஏமாற்றி அவர் வீட்டில் இருந்த பணத்தையும், பொருள்களையும் அபகரிக்கவே இந்த நாடகம் நடத்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீஸார் மாதவனை தேடி வருகின்றனர். அதேவேளையில் இந்த நாடகத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது எனவும் போலீஸார் விசாரணை செய்கின்றனர்.எம்.பி.ஏ. படித்துள்ள பிரபாகரனை திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக கூறி, ஏமாற்றி மாதவன் போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்க வைத்திருப்பது போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதில் மாதவன், தான் சிக்காமல் இருப்பதற்கு பிரபாகரனிடம் செல்லிடப்பேசி மூலம் தொடர்புக் கொள்ளும்போது வெவ்வேறு எண்களில் இருந்து தொடர்புக் கொண்டுள்ளதும், கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலம் தொடர்பு கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் தான் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக பிரபாகரனுக்கு அனுப்பிய கூரியர் கூட மற்றொருவர் முகவரியில் இருந்து அனுப்பியிருப்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
