சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடியவர்களை, விரட்டிப் பிடித்து கைது செய்த போலீஸாரை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் பாராட்டினார்.
பிகார் மாநிலம் முசாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அவதேஷ்ராய் (31). இவர் கூட்டாளி அதே மாநிலத்தைச் சேர்ந்த முந்த்ராகுமார் (18). இவர்கள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் பயணிகளின் கவனத்தை திசை திருப்பி உடைமைகள் மற்றும் செல்லிடப்பேசிகளை திருடியதாக, பெரியமேடு போலீஸாரால் 3 -ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். பெரியமேடு காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த இருவரும், அங்கிருந்து அன்று இரவு தப்பியோடினர்.
இதுகுறித்து தகவலறிந்த அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் டி.கிருஷ்ணமூர்த்தி, காவலர் கிருஷ்ணராஜ், முதல்நிலை பெண் காவலர் பி.வேதநாயகி ஆகியோர் அவதேஷ்ராயையும், முந்த்ராகுமாரையும் விரட்டிப்பிடித்து கைது செய்தனர். விசாரணையில் இருவரும், மணலியில் உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைவரிசை காட்டியதும், நவம்பர் 7-ஆம் தேதி விமானத்தில் தங்களது சொந்த ஊருக்கு செல்ல டிக்கெட் பதிவு செய்திருந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீஸார், இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தில், காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடிய இரு குற்றவாளிகளையும் விரட்டிப் பிடித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, காவலர் கிருஷ்ணராஜ், முதல்நிலை பெண் காவலர் வேதநாயகி ஆகியோரை, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் திங்கள்கிழமை நேரில் அழைத்து, பாராட்டி வெகுமதி அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேட்டூா் அணை திறக்கப்படாததால் டெல்டா பகுதி விவசாயிகள் கவலை: ஜி.கே.வாசன்
ஆட்டோ கட்டணத்தை உயா்த்த தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

குறுவை நெல் சாகுபடிக்கு ரூ.135 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம்: முதல்வா் விஜய் அறிவிப்பு






