நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை திங்கள்கிழமை (மே 27) ராஜிநாமா செய்ய உள்ளதாக கன்னியாகுமரி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஹெச்.வசந்தகுமார் கூறினார்.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்ய உள்ளேன். பேரவைத் தலைவரிடம் இதற்காக நேரம் கேட்டுள்ளேன். நேரம் ஒதுக்கப்பட்டதும், ராஜிநாமா கடிதத்தை அவரிடம் சமர்ப்பிப்பேன் என்றார் அவர்.
சட்டப்பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் பேரவையில் எப்போது எடுத்துக் கொள்ளப்படும் என்பது தெரியாததால் நான் ராஜிநாமா செய்வதற்கு திமுக ஒப்புதல் வழங்கியுள்ளது என்றார். ஒரு உறுப்பினர் இரண்டு பதவிகளை வகிக்கக் கூடாது. ஏற்கெனவே எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஒருவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால், இரண்டில் ஒரு பதவியை ராஜிநாமா செய்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










