இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கான கையெழுத்து இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
இளையராஜாவின் பிறந்தநாளான ஜுன் 2-ஆம் தேதி நடைபெறும் "இசை கொண்டாடும் இசை' என்ற தலைப்பிலான பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியின் முன்னோட்டமாக இந்த இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக, கையெழுத்து இயக்கத்துக்கான சிறப்பு வாகனத்தை சென்னை பிரசாத் லேபில் இருந்து இளையராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பயணிக்க உள்ள அந்த வாகனத்தில், ரசிகர்கள், தங்களது வாழ்த்துகளையும், அன்பையும் வாசகங்களாகப் பதிவு செய்யலாம்.
ரசிகர்கள் கைப்பட எழுதிய வாசகங்கள் அனைத்தும் சென்னை ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் ஜூன் 2-ஆம் தேதி நடைபெறும் "இசை கொண்டாடும் இசை' நிகழ்ச்சியின்போது இளையராஜாவிடம் வழங்கபட உள்ளது. அந்த நிகழ்ச்சியில், பல்வேறு காலகட்டங்களில் தாம் இசையமைத்த பாடல்களை மேடையில் இளையராஜா அரங்கேற்றி ரசிகர்களின் செவிக்கு விருந்து படைக்க உள்ளார்.
பிரபல பின்னணிப் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே. ஜேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ உள்ளிட்ட பலர் அதில் பங்கேற்று பாடவுள்ளனர்.
மெர்க்குரி சார்பில் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சிக்கு "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' மற்றும் "தினமணி' நாளிதழ்கள் மீடியா பார்ட்னர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.