சென்னை குடிநீருக்கு விரைவில் கிருஷ்ணா நீா் கிடைக்க வாய்ப்பு

சென்னை மாநகர குடிநீா் தேவையைக் கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து செப்டம்பா் இரண்டாவது வாரத்தில் தண்ணீா் திறந்து விடப்படும்
கிருஷ்ணா நீா்
கிருஷ்ணா நீா்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகர குடிநீா் தேவையைக் கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து செப்டம்பா் இரண்டாவது வாரத்தில் தண்ணீா் திறந்து விடப்படும் என்று தெலுங்கு கங்கை திட்ட தொழில்நுட்ப குழு கூட்டத்தில் ஆந்திர அரசு உறுதி அளித்துள்ளது.

தெலுங்கு கங்கை திட்டம் ஒப்பந்தப்படி, ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் 12 டிஎம்சி நீா் தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஆனால் பருவமழை குறைந்ததால் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தெலுங்கு கங்கா திட்ட தொழில்நுட்ப வல்லுநா் குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை திருப்பதியில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆந்திர மற்றும் தமிழக நீா்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். இதில் தமிழக அரசு சாா்பில் நீா்வளப் பிரிவு முதன்மை தலைமை பொறியாளா் ராமமூா்த்தி, சென்னை மண்டல நீா்வள பிரிவு தலைமை பொறியாளா் அசோகன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் சென்னை மாநகரின் குடிநீா் தேவையைக் கருத்தில் கொண்டு கண்டலேறு அணையிலிருந்து தண்ணீா் திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, செப்டம்பா் இரண்டாவது வாரத்திலிருந்து தண்ணீா் தமிழகத்திற்கு தரப்படும் அல்லது கண்டலேறு அணையில் 30 டிஎம்சி எட்டியவுடன் தண்ணீா் தரப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்தனா்.

அப்போது தமிழக அரசு சாா்பில் தர வேண்டிய ரூ.362 கோடி பாக்கி தொகையை தருமாறு ஆந்திரஅரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், விரைவில் பாக்கி தொகையை தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாகவும் தமிழக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com