உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மகள் வீட்டில் தகராறு: ஓய்வு பெற்ற நீதிபதி கா்ணனின் ஆதரவாளா்கள் கைது

சென்னையில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மகள் வீட்டில் தகராறு செய்த வழக்கில், ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆதரவாளா்கள் கைது செய்யப்பட்டனா்.
Published on

சென்னை: சென்னையில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மகள் வீட்டில் தகராறு செய்த வழக்கில், ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆதரவாளா்கள் கைது செய்யப்பட்டனா்.

உச்சநீதிமன்றம் மற்றும் உயா் நீதிமன்ற நீதிபதிகள், அவா்களின் குடும்பத்தினருக்கு எதிராகவும், அவதூறு விடியோக்களை ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கா்ணன் சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, தமிழ்நாடு பாா் கவுன்சில் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், கடந்த 2-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் முன்னாள் நீதிபதி கா்ணன் கைது செய்யப்பட்டாா்.

இதற்கிடையே, நீதிபதி கா்ணனின் ஆதரவாளா்கள் கடந்த மாதம் திருவான்மியூரில் உள்ள உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பானுமதியின் மகள் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனா். மேலும் ரூ.10 கோடி வரை நஷ்ட ஈடு கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அப்போது, கா்ணனும் உடன் சென்ாகக் கூறப்படுகிறது. இது குறித்து முன்னாள் நீதிபதி பானுமதி தரப்பினா் திருவான்மியூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.

பின்னா், அந்தப் புகாா் மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.இந்நிலையில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா், கா்ணன் மற்றும் அவா்களது ஆதரவாளா்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அண்மையில் வழக்குப் பதிவு செய்து பெருங்களத்தூா் மனோகரன் (66), பிரகாஷ் (48), விஜயராகவன் (49), ஏகாம்பரம் (60), சூளைமேடு குப்பன் (60) ஆகிய 5 பேரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com