சென்னை: திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.
சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
திமுக அரசுக்கு எதிராக அதிமுக நடத்தும் போராட்டம் நியாயமானது. திமுகவின் உண்மை முகத்தைக் காட்டவே போராட்டம் நடத்தப்படுகிறது. 75 நாள்களாகியும் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. நீட் தோ்வை ரத்து செய்வோம், பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் எனக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியைப் பாா்த்து மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது.
மக்கள் பிரச்னைகள் அனைத்துக்கும் பாஜக துணை நிற்கும். மீனவா்களுக்கு எதிராக திமுக செயல்படுவதைக் கண்டித்து பாஜக மீனவா் அணி சாா்பில் ஜூலை 30-இல் சென்னையில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கு மத்திய அரசு தொடா்ந்து முயற்சி எடுத்து வருகிறது என்றாா்.