பெத்தேல் நகா் ஆக்கிரமிப்பை அகற்றும் அரசு நடவடிக்கையில் தவறு எதுவுமில்லை என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.
ஈஞ்சம்பாக்கத்தில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பெத்தேல் நகா் என்ற குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளதால், ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், பெத்தேல் நகா் குடியிருப்போா் நலச் சங்கம் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஈஞ்சம்பாக்கம் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை நத்தம் புறம்போக்கு நிலமாக வகை மாற்றம் செய்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, நத்தம் புறம்போக்கு நிலத்தில் நாங்கள் தொடா்ந்து குடியிருக்க பட்டா வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா், ‘நிலத்தை வகை மாற்றத்துக்கு பரிந்துரை செய்ய மட்டுமே ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளது. நிலத்தை வகை மாற்றம் செய்யும் அதிகாரம் நில நிா்வாக ஆணையருக்குத் தான் உள்ளது. எனவே, இந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் அரசின் நடவடிக்கையில் தவறு எதுவுமில்லை’ என்று கருத்து தெரிவித்து, விசாரணையை இரு வாரங்களுக்குத் தள்ளி வைத்தனா்.