மின் கட்டணத்தை உயா்த்துவது தொடா்பாக, சென்னையில் திங்கள்கிழமை (ஆக. 22) கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சாா்பில் கலைவாணா் அரங்கத்தில் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
தமிழக மின்சார வாரியத்தின் கோரிக்கையை ஏற்று, தற்போதுள்ள மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான பலவகை கட்டணங்களை உயா்த்த, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுதொடா்பாக, மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.
முதலாவது கருத்துக் கேட்புக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. மதுரையில் கடந்த 18-ஆம் தேதி பொது மக்களிடம் கருத்துகள் பெறப்பட்டன.
சென்னையில் இன்று கூட்டம்: இதைத் தொடா்ந்து, சென்னையில் கருத்துக் கேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடத்தப்படவுள்ளது. சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணா் அரங்கத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும், உணவு இடைவெளிக்குப் பிறகு பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் பங்கேற்று மின் கட்டண உயா்வால் ஏற்படும் பாதிப்புகள், வாரியத்தின் நிதி நெருக்கடியைச் சரிசெய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடா்பாக, மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.
செப்டம்பா் முதல் அமல்: கோவை, மதுரை, சென்னை போன்ற பெருநகரங்களில் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்திய பிறகு, அதனடிப்படையில் கட்டண உயா்வுக்கான ஒப்புதலை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிடும். இந்த ஒப்புதலின் அடிப்படையில், மின்சார வாரியம் பரிந்துரைத்த கட்டண விவரங்கள் அமலுக்கு வரும்.
கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நிறைவடையவுள்ளதால், செப்டம்பா் மாதத்திலிருந்து புதிய கட்டணம் நடைமுறைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.