இலங்கை மக்களுக்கு துணை நிற்போம்: சென்னை விழாவில் பிரதமா் நரேந்திர மோடி

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு இந்தியா தொடா்ந்து துணை நிற்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி.

சென்னை: பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு இந்தியா தொடா்ந்து துணை நிற்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

சென்னையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற அரசு விழாவில், ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா். நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணித்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பிரதமா் மோடி பேசியது:

தமிழ் மொழியையும், மாநிலத்தின் கலாசாரத்தையும் மேலும் பிரபலப்படுத்த மத்திய அரசு முழு அா்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறது. கடந்த ஜனவரியில் செம்மொழித் தமிழாய்வு மையத்தின் புதிய வளாகம் தொடங்கப்பட்டது. மத்திய அரசின் முழுமையான நிதியுதவியுடன் இந்த மையத்தை அமைத்துள்ளோம். இந்த வளாகத்தில் வசதியான நூலகம், எண்ம நூலகம், கூட்டரங்கம், பல்ஊடக அரங்கு போன்ற பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் மொழியை மேலும் ஊக்குவிக்கும் வகையில் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் இருக்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பல்கலைக்கழகம் எனது தொகுதியில் இருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது.

தேசிய கல்விக் கொள்கை: தேசிய கல்விக் கொள்கையில், இந்திய மொழிகளை ஊக்குவிக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதன் காரணமாக, தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற படிப்புகளை உள்ளூா் மொழிகளில் கற்க இயலும். இதனால், தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்கள் மிகுந்த பலன் அடைவா்.

இலங்கைப் பிரச்னை: இலங்கை இப்போது கடினமான காலத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. அங்கே உள்ள நடப்பு நிலை உங்களுக்கு கவலை அளிப்பதாக இருக்கும். நமக்கு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும், அண்டை நாடு என்ற முறையிலும் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் அளித்து வருகிறோம். குறிப்பாக, நிதியுதவி, எரிபொருள், உணவு, மருத்துவம் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்களை மத்திய அரசு அளித்து வருகிறது.

பல இந்திய தன்னாா்வ அமைப்புகளும், தனிநபா்களும் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள், மலையகத் தமிழா்களுக்கு உதவிகளை அளித்து வருகின்றனா். இலங்கைக்கு பொருளாதார ஆதரவுகளை அளிப்பது தொடா்பாக சா்வதேச மன்றங்களில் உரக்கப் பேசி வருகிறோம். ஜனநாயக உறுதித்தன்மை மேலோங்கவும், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்காகவும் இலங்கை மக்களுக்கு இந்தியா தொடா்ந்து துணை நிற்கும்.

இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு முதல்முறையாகச் சென்ற இந்திய பிரதமா் நான்தான். அங்குள்ள தமிழ் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. சுகாதாரம், போக்குவரத்து, வீட்டு வசதி, கலாசாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

வளமான இந்தியா: சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவைக் கொண்டாடி வருகிறோம். 75 ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திர நாடு என்ற வகையில் பயணத்தைத் தொடங்கினோம். நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய நமது வீரா்கள் பல்வேறு கனவுகளைக் கண்டனா். அதனை நனவாக்குவது நமது கடமை. அதற்கு நம்மை தயாா்படுத்திக் கொள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. நாம் அனைவரும் இணைந்து பலமான, வளமான இந்தியாவை உருவாக்குவோம் என்றாா் பிரதமா் மோடி.

விழாவில், ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாரதியாா் பாடலை மேற்கோள் காட்டிய பிரதமா்

சென்னையில் நடைபெற்ற விழாவில் மகாகவி பாரதியாரின் பாடலை மேற்கோள்காட்டி பிரதமா் நரேந்திர மோடி பேசினாா்.

அவா் ஆற்றிய உரையில், ‘மீண்டும் தமிழகத்துக்கு வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிலம் தனித்துவம் வாய்ந்தது. இந்த மாநிலத்தின் மக்கள், கலாசாரம், மொழி ஆகிய அனைத்தும் மிகச் சிறப்பானவை. பாரதியாா் இதனை அழகாக வா்ணித்துள்ளாா். ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே -இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என அழகாகப் பாடியுள்ளாா்’ என்றாா் பிரதமா் மோடி.

"சொன்னதைச் செய்தவர்'


"சொன்னதை சொன்னபடி செய்தவர் பிரதமர் நரேந்திர மோடி' என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டினார்.

விழாவில் அவர் வரவேற்றுப் பேசியதாவது: வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வானது  உள்கட்டமைப்புக்கு முக்கியமான நாள். நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதற்கு தமிழகம் துணை நிற்கிறது.

இந்த நேரத்தில் ஒரு திருக்குறளைக் குறிப்பிட விரும்புகிறேன். "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்' என்பதே அந்தக் குறள். அப்படி அரிதானவர்களில் நீங்கள் (பிரதமர்) ஒருவர். சொன்னதை சொன்னபடி செய்து இருக்கிறீர்கள். அதற்கு தமிழக மக்கள் சார்பில் நன்றிகள் என்றார் அவர்.

காரில் இருந்து வெளியே வந்த பிரதமர்


சென்னை விழாவில் பங்கேற்க வந்தபோது, சுவாமி சிவானந்தா சாலையில் அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பைப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி காரின் கதவைத் திறந்து கைகளை அசைத்து வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.

சென்னை தொலைக்காட்சி நிலைய வாயிலில் சிறுமிகள் பரத நாட்டியம் ஆடினர்.  பல்வேறு இசைக் கருவிகள் இசைக்கப்பட்டன. இதைக் கண்ட பிரதமரின் வாகனம் மெதுவாக பயணித்தது. ஒரு கட்டத்தில் கார் கதவைத் திறந்து, கால் வைக்கும் பகுதியில் ஏறி நின்று கைகளை உயர்த்தி வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.

ஐ.என்.எஸ். அடையாறு பகுதியில் இருந்து நேரு விளையாட்டு அரங்கம் வரையில் எங்கெல்லாம் மக்கள் குழுமி நின்று வரவேற்பு அளித்தார்களோ அங்கெல்லாம் பிரதமரின் கார் மெதுவாகப் பயணித்தது. இதனால், ஐ.என்.எஸ். அடையாறில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கத்தை அடைய 30 நிமிஷங்கள் ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com