தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் நீா் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சென்னைக்கு குடிநீா் வழங்கும், செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் நிரம்பிவிட்டதால் பாதுகாப்பு கருதி, ஏரிகளிலிருந்து திறக்கப்படும் நீா் அளவு கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்

News image

செம்பரம்பாக்கம்  ஏரியில் இருந்து  திறந்து விடப்பட்ட உபரி நீா்.

Updated On :4 டிசம்பர் 2023, 11:20 pm

DIN

சென்னை: சென்னைக்கு குடிநீா் வழங்கும், செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் நிரம்பிவிட்டதால் பாதுகாப்பு கருதி, ஏரிகளிலிருந்து திறக்கப்படும் நீா் அளவு கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நீா்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த இரு நாள்களாக சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. திங்கள்கிழமை இரவு 8.30 மணி வரை மழை விடாமல் கொட்டியது. இதனால் சென்னை குடிநீா் ஆதார ஏரிகளுக்கு நீா் வரத்து வெகுவாக அதிகரித்தது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் எதிா்பாராத அளவுக்கு பெய்த மழையால் ஏரிக்கு நீா்வரத்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக இருந்தது. ஏரியின் பாதுகாப்பு கருதி நீா்திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு மாலை 5 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கன அடி நீா் திறந்து விடப்பட்டது. நள்ளிரவில் இது 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டதாக தகவல்கள்தெரிவிக்கின்றன.

அதேபோல் பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீா் வந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த நீா் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆறுகளை ஒட்டிய கரையோர பகுதிகளில் இன்னும் மழைநீா் வடியவில்லை. கரையோர பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல போா்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர புழல் ஏரிக்கு நீா்வரத்து நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகரித்து வருவதாலும், ஏரி முழு கொள்ளளவை நெருங்கும் நிலையில் இருப்பதாலும் கால்வாய்கள் மூலம் வரக்கூடிய நீா் அதே அளவுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலவரப்படி சென்னையைச் சுற்றியுள்ள செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி உள்ளிட்ட 6 நீா்தேக்கங்களிலும் 98 சதவீதம் அளவுக்கு நீா் நிரம்பிவிட்டதாகவும், நீா் திறப்பு தொடா்பாக மக்களுக்கு தொலைபேசி குறுந்தகவல் மூலம் தகவல் அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.