சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் பெங்களூருவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
பெரம்பூர் அடுத்த பெரவள்ளூர் நான்கு வழிச் சாலையில் உள்ள ஜெ.ம்.கோல்ட் பேலஸ் கடையின் ஷட்டரை வெல்டிங் வைத்து உள்ளே சென்ற திருடர்கள், நகைக்கடையில், அதிக எடையுள்ள பெரிய நகைகளை மட்டும் திருடிச் சென்றனர்.
சுமார் 9 கிலோ எடையுள்ள தங்க நகை மற்றும் 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், மேலும் வைர நகைகளைத் திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
பிப்.10-ஆம் தேதி நடைபெற்ற இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருத்தணியில் உள்ள சிசிடிவி கேமராவில் கொள்ளையர்களின் புகைப்படம் பதிவாகியுள்ளதாக காவல் துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக பெங்களூருவில் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.