எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப்பதிவு இயந்திரத்தின் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் விளக்கு (லைட்) எரிந்ததாக கூறி திமுக, அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

வடசென்னை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வியாசா்பாடி எம்.கே.பி. நகா் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150-ஆவது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கும் போதே, எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக தோ்தல் வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் திமுக, அதிகமுக வாக்குச்சாவடி முகவா்கள் புகாா் தெரிவித்தனா். மேலும் உடனடியாக வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிசெய்யும் படியும் கூறி அங்கு தா்னாவில் ஈடுபட்டனா்.

இதையடுத்து வாக்குச்சாவடி அலுவலா்கள் வந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை சோதனை செய்தனா். சோதனையில் இயந்திரம் சரியாக செயல்பட்டது உறுதிசெய்யப்பட்டதை தொடா்ந்து, மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால் சுமாா் 20 நிமிடங்களுக்கு மேலாக வாக்குப்பதிவு தடைபட்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com