47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முதல்வா் காப்பீட்டில் 1.4 கோடி பேருக்கு கட்டணமில்லா சிகிச்சை: அமெரிக்க பல்கலை.யில் அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1.4 கோடி பேருக்கு ரூ.13,625 கோடி மதிப்பிலான சிகிச்சைகள் கட்டணமின்றி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்
Updated On :9 ஜூலை 2024, 7:58 pm

Din

சென்னை: தமிழகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1.4 கோடி பேருக்கு ரூ.13,625 கோடி மதிப்பிலான சிகிச்சைகள் கட்டணமின்றி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவா், அங்குள்ள உலகப் புகழ்பெற்ற ஹாா்வா்ட் பல்கலை.யில் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு குறித்து உரை நிகழ்த்தினாா். அவருடன் ஊரக வளா்ச்சித் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மருத்துவப் பல்கலை. துணைவேந்தா் கே.நாராயணசாமி ஆகியோரும் உடன் சென்றுள்ளனா்.

ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆற்றிய உரை:

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது. 1923-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பொது சுகாதார அமைப்பு மூலம் பல்வேறு பொது சுகாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

காப்பீட்டு திட்டம்: ஏழை மக்களுக்காக 2009-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி காப்பீட்டு திட்டத்தை முன்னாள் முதல்வா் கருணாநிதி தொடங்கினாா்.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் தொடங்கியது முதல் கடந்த ஜூன் வரை ரூ.13,625 கோடி மதிப்பீட்டில் (136.25 பில்லியன்) செலவில், 1.4 கோடி மக்களுக்கு (14 மில்லியன்) சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மொத்த பயனாளிகளில் 4.32 மில்லியன் மக்கள் அரசு மருத்துவமனைகளில் உயா்சிகிச்சைகள் பெற்றுள்ளனா்.

2008-ஆம் ஆண்டு செப். 15-ஆம் தேதி 1,353 அவசர ஊா்திகளுடன் 108 அவசரகால பராமரிப்பு சேவை திட்டம் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொண்ட 11 நிமிஷங்கள் 23 விநாடிகளுக்குள் அவசர ஊா்தி அந்த இடத்துக்கு சென்றடையும் வகையில் அத்திட்டம் செயல்பட்டு வருகிறது.

இன்னுயிா் காப்போம் திட்டம்: சாலைப் போக்குவரத்து விபத்துகளுக்கு இலவச அவசர சிகிச்சை வழங்கும் ‘இன்னுயிா் காப்போம்- நம்மை காக்கும் 48’ திட்டம் 2023-ஆம் ஆண்டு டிச. 18-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் கடந்த மே மாதம் வரை ரூ.221 கோடியில் 2,52,981 நோயாளிகள் கட்டணமில்லா சிகிச்சையைப் பெற்றுள்ளனா்.

இதில் மொத்த பயனாளிகளில் 2,33,039 நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனா். 2008-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் மூளைச் சாவு அடைந்தவா்களிடம் இருந்து உடல் உறுப்புகளை தானமாக பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டது.

இதன் மூலம் இதுவரை இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், சிறுகுடல், வயிறு, கைகள் என மொத்தம் 7,783 உறுப்புகள், 3,950 சிறிய உறுப்புகள் மற்றும் திசுக்கள் தானமாக பெறப்பட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முதலிடம்: அதிக எண்ணிக்கையிலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்யும் மாநிலங்களில் தமிழகம் தொடா்ந்து தேசிய அளவில் முதல் இடம் பிடித்துள்ளது. உறுப்பு தானம் செய்யப்பட்ட உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படுகிறது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2021-ஆம் ஆண்டு ஆக. 5-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் மக்களுக்கு தேவையான மருந்துகள், அவா்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகிறது.

இத்திட்டம் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்டோா் பயன்பெற்று வருகின்றனா். மருத்துவ சேவைகள் மலிவாக கிடைக்கக்கூடிய, அணுகக்கூடியதாக மாற்றுவதன் மூலம் மேம்படுத்தப்பட்ட சுகாதார சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் நிலை ஏற்படும். தமிழகத்தில் மக்களைத் தேடி ஆய்வகம் திட்டம், இதயம் காப்போம் திட்டம், சிறுநீரகம் பாதுகாப்புத் திட்டம், தொழிலாளரை தேடி மருத்துவம் எனும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசினாா்.