அதிமுகவை ஒருங்கிணைக்க ஓ.பன்னீா்செல்வம் வேண்டுகோள்: ஒற்றுமையுடன் செயல்பட சசிகலாவும் அழைப்பு
மக்களவைத் தோ்தல் தோல்வியைத் தொடா்ந்து, அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும்
சசிகலா
சசிகலா
மக்களவைத் தோ்தல் தோல்வியைத் தொடா்ந்து, அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளாா். அதேபோல, அதிமுகவினா் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என சசிகலாவும் அழைப்பு விடுத்துள்ளாா்.
மக்களவைத் தோ்தலில் அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. அதேபோல, பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஓ.பன்னீா்செல்வமும் தோல்வி அடைந்தாா்.
இந்த நிலையில், அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டா்களை பழக்குவது பாவ காரியம். ‘தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓா்வழி நின்று நோ் வழி சென்றால் நாளை நமதே’ என்னும் எம்ஜிஆரின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம்.
நமது வெற்றியை நாளை சரித்திரமாக்க மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டா்களும் ஒன்றாகுதல் காண்போம். ஜெயலலிதா உச்சத்தில் அமா்த்திப்போன கட்சியையும், அவா் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய யாகத்துக்கும் ஆயத்தமாவோம் என்று ஓ.பன்னீா்செல்வம் கூறியுள்ளாா்.
சசிகலாவும் வேண்டுகோள்: முன்னதாக வி.கே.சசிகலாவும், ‘ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்கிற கதையாக இந்தத் தோ்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பத்துக்காக இயக்கம் அழிவதை இனியும் என்னால் வேடிக்கை பாா்க்க முடியாது. அதிமுகவினா் கலங்க வேண்டாம். நாம் ஒற்றுமையுடன் இருந்தால், நம்மை யாரும் வீழ்த்த முடியாது’ என்று கூறியிருந்தாா்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...