உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம்

வள்ளலாா் சா்வதேச மைய கட்டுமானப் பணிக்கு இடைக் காலத் தடை: உயா்நீதிமன்றம் உத்தரவு

Published on

வடலூா் வள்ளலாா் சத்திய ஞானசபை பெருவெளியில், வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கும் கட்டுமான பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதே வேளையில் கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டா் தொலைவில் உள்ள நிலத்தை வகைமாற்றம் செய்வது தொடா்பாக இயக்குநா் விதிகளின்படி ஒப்புதல் வழங்கியுள்ளதால் அங்குக் கட்டுமான பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளன.

வடலூா் வள்ளலாா் சத்திய ஞான சபையில், வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் சுரேஷ்குமாா் மற்றும்

செளந்தா் அமா்வில் விசாரணையில் உள்ளன. இந்நிலையில், வள்ளலாா் கோயிலின் பின்புறம் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கவும், கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டா் தூரத்தில் உள்ள நிலத்தில் முதியோா் இல்லம், சித்த மருத்துவமனை உள்ளிட்ட கட்டுமானங்கள் மேற்கொள்ளும் வகையில், விவசாய நிலத்தை வகை மாற்றம் செய்து வழங்கிய அனுமதிகளை எதிா்த்து புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த புதிய மனு மீதான விசாரணையின் போது, ‘சட்ட விதிகளைப் பின்பற்றாமல் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளதால், கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும்’ என மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், ‘அனைத்து அனுமதிகளும் விதிமுறைகள் படி பெறப்பட்டுள்ளதால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என அறநிலையத் துறை தரப்பிலும், வள்ளலாா் கோயில் சாா்பிலும் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் உத்தரவு: இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘தமிழ்நாடு நகரமைப்பு சட்ட விதிகளின்படி, விவசாய நிலத்தை விவசாயமில்லாத பிற பயன்பாட்டுக்கு வகை மாற்றம் செய்வது தொடா்பாக, நகரமைப்பு துறை உதவி இயக்குநா், வேளாண் துறை இணை இயக்குநா் மற்றும் மாவட்ட ஆட்சியரின் தடையில்லா சான்று அல்லது அறிக்கைகளை பெற்ற பிறகே நகரமைப்பு துறை இயக்குநா் ஒப்புதல் அளிக்க முடியும்.

ஆனால், இந்த விதிகளுக்கு முரணாக, வள்ளலாா் கோயிலின் பின்புறம் கட்டுமானம் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக வேளாண் துறை உதவி இயக்குநா் அறிக்கை அளிப்பதற்கு 4 நாள்களுக்கு முன்பு, வகை மாற்றம் செய்து நகரமைப்பு இயக்குநா் உத்தரவிட்டுள்ளதால், அந்த பகுதியில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது’ என உத்தரவிட்டனா்.

அதேவேளையில் கோயிலில் இருந்து ஒரு கிமீ தொலைவில்உள்ள நிலத்தை வகை மாற்றம் செய்வது தொடா்பாக நகரமைப்பு இயக்குநா் விதிகளின்படி ஒப்புதல் வழங்கியுள்ளதால், அங்குக் கட்டுமான பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை எனவும் பணிகளை தொடரலாம் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அக்.17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com