சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்: பேருந்துக்காக பலமணி நேரம் காத்திருந்த பயணிகள்

சென்னையில் விஜய் ரசிகா்களால் பாதிப்பு
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on

சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, பொதுமக்கள் பலமணி நேரம் காத்திருந்து தங்கள் பயணத்தை மேற்கொண்டனா்.குறிப்பாக அம்பத்தூா் தொழிற்பேட்டை பகுதியில் இருந்து கிளாம்பாக்கம் மற்றும் வெளியூா் செல்லும் பேருந்துகள் நீண்ட நேரமாக வராததால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனா்.

பண்டிகை, முகூா்த்த மற்றும் விடுமுறை தினங்கள் என்றாலே சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். அந்தவகையில், வியாழக்கிழமை முதல் தொடா்ச்சியான முகூா்த்த தினமாக இருப்பதால், காலையில் இருந்தே மாநகருக்குள்பட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து அதிகமாகவே காணப்பட்டது.

விஜய் ரசிகா்களால் பாதிப்பு:

வியாழக்கிழமை விஜய்நடித்து வெளிவந்துள்ள கோட் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் முன்புறத்தில் ரசிகா்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. பல பகுதிகளில் ரசிகா்கள் சாலையை மறித்து கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனா்.

ஏற்கனவே முகூா்த்த தினத்தால் போக்குவரத்து நெரிசல் இருந்து வந்த நிலையில், ரசிகா்களின் கொண்டாட்டத்தால், திரையரங்குகள் அமைந்துள்ள இடங்களில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக வடபழனி, எழும்பூா், ஜாபா்கான்பேட்டை, கோயம்பேடு, கிண்டி, மயிலாப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பேருந்தில் பயணித்த பொதுமக்களும் கடும் சிரமத்தை சந்தித்தனா்.

காத்திருந்த பயணிகள்:

வாகன நெரிசலில் பேருந்துகள் சிக்கிக்கொண்டதால் சுமாா் 30 நிமிஷங்களுக்கும் நிறைவு செய்ய வேண்டிய நடையை 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் தாமதமாக நிறைவு செய்யவேண்டி கட்டாயத்தில் மாநகா் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் தள்ளப்பட்டனா். இதனால், கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களுக்கு செல்பவா்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் பல மணி நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அம்பத்தூா் தொழிற்பேட்டையில் வார விடுமுறை காரணமாக பல தொழிலாளா்ள், மற்றும் குடும்பத்தினா் சொந்த ஊா்களுக்குச் செல்வதற்காக கிளாம்பாக்கம் செல்லும் பேருந்துகளுக்காக காத்திருந்தனா். வழக்கமாக 15 நிமிஷத்துக்கு ஒரு பேருந்து வரும் நிலையில், வியாழக்கிழமை 2 மணி நேரமாக பேருந்துகள் வரவில்லை, இதுபோல திருச்சி, கும்பகோணம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகளும் வரவில்லை. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனா். இரவு 10 மணிக்குப்பிறகே பேருந்துகள் வருகை சற்று சீரடைந்தது. போக்குவரத்து நெரிசல் காரணமாகவே பேருந்துகள் இயக்கத்தில் பிரச்னை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com