காற்றாலை மின் திட்டத்துக்கான புதிய கொள்கை வெளியீடு

காற்றாலை மின் திட்டத்துக்கான புதிய கொள்கை வெளியீடு

காற்றாலை மின் திட்டத்துக்கான புதிய கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Published on

காற்றாலை மின் திட்டத்துக்கான புதிய கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 1984-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் காற்றாலைகளை புனரமைத்தல், புதுப்பித்தல், ஆயுள் நீட்டிப்பு ஆகிய 3 திட்டங்களுக்கு வழிசெய்யும் வகையில் புதிய கொள்கை வெளியிடப்படுகிறது. அதன்படி, 20 ஆண்டுகள் முடிவடைந்த காற்றாலையின் ஆயுள்காலத்தை நீட்டிக்க முடியும்.

இதற்கு சம்பந்தப்பட்ட காற்றாலையின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 90 சதவீதம் மின் உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் முதல்கட்டமாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆயுள் நீட்டிப்பு வழங்கப்படும். காற்றாலை மின்சாரத்தை உற்பத்தியாளா் பயன்படுத்தியதுபோக, உபரியை மின் வாரியத்திடம் வழங்கி தேவைப்படும்போது வாங்கிக் கொள்ளலாம்.

உற்பத்தியாகும் மின்சாரத்தில் 50 சதவீத மின்சாரத்தை மின் வாரியம் கொள்முதல் செய்யும். ஆயுள் நீட்டிப்புக்கு வளா்ச்சிக் கட்டணமாக ஒரு மெகாவாட்டுக்கு ரூ. 30 லட்சத்தை எரிசக்தி கழகத்துக்குச் செலுத்த வேண்டும். இந்தக் கொள்கையின் அடிப்படையில் பழைய காற்றாலைகளை புதுப்பித்தல், மீண்டும் மின்னேற்றம் செய்தல் போன்றவற்றுக்கும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தக் கொள்கை வரும் 2030 மாா்ச் 31-ஆம் தேதி வரையோ, அடுத்த கொள்கை வெளியிடும் வரையோ அமலில் இருக்கும். இதன்மூலம் தமிழகத்தின் காற்றாலை மின் உற்பத்தியை மேலும் 25 சதவீதம் அதிகரிக்க முடியும். 2030-இல் தமிழகத்தின் மின் கட்டமைப்பில் 50 சதவீதம் பசுமை மின் உற்பத்தி என்ற உயரிய இலக்கை அடைய புதிய கொள்கை வழிசெய்யும் என அதில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com