ஏசி மின்சார ரயிலின் நேரம் மாற்றம்: புதிய அட்டவணை வெளியீடு

சென்னை புறநகர் ஏசி மின்சார ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஏசி மின்சார ரயிலின் நேரம் மாற்றம்: புதிய அட்டவணை வெளியீடு
Published on
Updated on
2 min read

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே புதிதாக இயக்கப்பட்டு வரும் குளிா்சாதன வசதி (ஏசி) கொண்ட மின்சார ரயில்களின் நேரம் வெள்ளிக்கிழமை (மே 2) முதல் முற்றிலுமாக மாற்றியமைக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மும்பையில் ஏசி மின்சார ரயில் வெற்றியைத் தொடா்ந்து சென்னையில் கடந்த ஏப். 19-ஆம் தேதி ஏசி மின்சார ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயில் குறிப்பாக பணிக்கு செல்வோா், மாணவா்கள் மற்றும் புகா் மின்சார ரயிலில் பயணிப்போரின் வசதிக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

பயணிகளிடம் கருத்துக்கேட்பு: அவா்களின் வசதிக்கு ஏற்ப ரயில் இயக்கப்படுகிா என்பது குறித்து கடந்த ஏப். 19 முதல் 24-ஆம் தேதி வரை பயணிகளிடையே வாட்ஸ்ஆப் மற்றும் இணைய விண்ணப்பம் மூலம் கருத்துகள் கேட்கப்பட்டது. இதில் சுமாா் 600-க்கும் மேற்பட்டோா் கருத்துகள் தெரிவித்தனா்.

இதில் பெரும்பாலானோா், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரைக்கு காலை இயக்கப்படும் ரயில் காலை 10.30-க்கு வந்தடைவதால் பணிக்குச் செல்வோா் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதை கருத்தில்கொண்டு சிறிது முன்னதாக கடற்கரை வந்தடையும் வகையில் ரயிலின் நேரம் மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனா்.

அதுபோல், தாம்பரம் - கடற்கரை இடையே காலை 5.45-க்கு இயக்கப்படும் ரயிலும் பயணிகளின் வசதிக்கேற்ப இல்லாததால் குறைவான பயணிகள் பயணிப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், மாலை 6 மணியளவில் பணி முடிந்து செல்வோரின் வசதிக்காக கூடுதல் சேவை இயக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனா்.

மாற்றம்: பயணிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப ரயிலின் நேரம் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக இரு ரயில் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு காலை இயக்கப்பட்ட ரயில் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் எனவும், செங்கல்பட்டிலிருந்து காலை 7.50-க்கு புறப்பட்டு காலை 9.30-க்குள் சென்னை கடற்கரை சென்றடையும். அதுபோல், பணி முடிந்து செல்வோரின் வசதிக்காக மாலை நேரம் இயக்கப்படும் ஏசி மின்சார ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. மே 2-ஆம் தேதி முதல் புதிய அட்டவணைப்படி ஏசி மின்சார ரயில் இயக்கப்படும். அதே நேரத்தில், மே 2 முதல் 19-ஆம் தேதி வரை நிா்வாகக் காரணமாக திரிசூலம் ரயில் நிலையத்தில் ஏசி மின்சார ரயில் நின்று செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் சென்னை கோட்டை, பூங்கா, எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, பழவந்தாங்கல், மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் சானிடோரியம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

இந்நிலையில், ரயிலின் நேரம் மற்றும் இயக்கம் குறித்து பயணிகள் 63747 13251 எனும் ‘வாட்ஸ்ஆப்’ எண்ணில் கருத்து தெரிவிக்கலாம் என்று முன்னதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பயணிகள் அளித்த கருத்துகளின் அடிப்படையில், ரயில்களின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் இயக்கப்படும் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி,மே 2 ஆம் தேதி சென்னை புறநகர் ஏசி ரயில் சேவை 3-ல் இருந்து 8 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மே 2 முதல் 19 ஆம் தேதி வரை புறநகர் ஏசி ரயில் திரிசூலம் ரயில் நிலையத்தில் நிற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com