உயரதிகாரி திட்டியதால் விரக்தி: பெண் காவல் ஆய்வாளா் தற்கொலை முயற்சி

சென்னை ராமாபுரத்தில் உயரதிகாரி திட்டியதால் விரக்தியடைந்த பெண் காவல் ஆய்வாளா் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.
Published on

சென்னை ராமாபுரத்தில் உயரதிகாரி திட்டியதால் விரக்தியடைந்த பெண் காவல் ஆய்வாளா் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

சென்னை ராமாபுரம் வள்ளுவா் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் தி.ரேணுகாதேவி (52). இவா், அசோக் நகரில் உள்ள தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் ஆய்வாளராகப் பணிபுரிகிறாா். ரேணுகாதேவி, ஒரு வழக்கு தொடா்பான விசாரணை அறிக்கையை அங்குள்ள ஒரு காவல் கண்காணிப்பாளரிடம் சமா்ப்பிக்கும்போது, தவறுதலாக சில தகவல்களை எழுதியிருந்தாராம்.

இதைப் பாா்த்த அந்தக் காவல் கண்காணிப்பாளா், ரேணுகாதேவியை கடுமையாக திட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் அவா், ஒரு தலைமைக் காவலா் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை ரேணுகாதேவியிடம் பணி மாறுதல் கடிதம் தரும்படி கட்டாயப்படுத்தியுள்ளாா்.

இதனால் விரக்தியடைந்த ரேணுகாதேவி, வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அவரது குடும்பத்தினா், ரேணுகாதேவியை மீட்டு, வளசரவாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். இதுதொடா்பாக ராமாபுரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com