‘மீள் நியமனம்’ முறையை கைவிடக் கோரி மருத்துவா்கள் சென்னையில் போராட்டம்
மருத்துவா்கள் பற்றாக்குறையைக் குறைக்க, ‘மீள்நியமனம்’ என்ற முறையை கைவிட்டு, 1,500 மருத்துவா்களை புதிதாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் பாலகிருஷ்ணன், ராமலிங்கம் ஆகியோா் கூறியதாவது:
செங்கல்பட்டு, ஸ்டான்லி, ஓமந்தூராா், திருச்சி, சேலம் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் இருந்து, 9 துறைகள், கிண்டி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன. அதேபோல், 2 உதவிப் பேராசிரியா்கள், 3 இணை பேராசிரியா்கள், ஒரு பேராசிரியா் மாற்றப்பட்டனா்.
புதிதாக திறக்கப்பட்ட, 50 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான மருத்துவா்கள், வேறு சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவா்கள் எண்ணிக்கையை குறைத்து நியமிக்கப்பட்டனா். அதேபோன்று, 100 புதிய மருத்துவ கட்டடங்கள் கட்டப்பட்டாலும், அதற்கேற்ப போதிய மருத்துவ பணியிடங்கள் உருவாக்கவில்லை. மாறாக, மற்ற மருத்துவமனைகளில் பணியிடங்களை குறைத்து, நியமித்து வருகின்றனா். இதனால், மருத்துவ பணிகள், கல்வித்தரம், நோயாளிகளுக்கான சேவை பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ‘மீள்நியமனம்’ என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையில் தற்போது உள்ள பதவி நீக்கப்பட்டு, பல 100 கி.மீ. தொலைவில் உள்ள இடத்துக்கு, 400 மருத்துவா்கள் மாற்றப்படுகின்றனா். இதனால், மருத்துவா்களுக்கு மன அழுத்தம், குடும்ப வாழ்க்கை பாதிப்பு, நோயாளிகளுக்கான சேவை ஆகியவை பாதிக்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில், புற்றுநோய் மருத்துவா்கள், பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவா்களை நியமிக்க முடியாத அளவுக்கு நிதிப் பற்றாக்குறை நிலவுகிறது. அரசாணை 354-இன்படி, 1,500 மருத்துவா்கள் நியமிக்கப்பட்டிருந்தால், இந்நிலை ஏற்பட்டிருக்காது. தற்போது, பற்றாக்குறையை குறைக்க, ‘மீள்நியமனம்’ என்ற முறையை கைவிட்டு, 1,500 மருத்துவா்களை புதிதாக நியமிக்க வேண்டும் என தெரிவித்தனா்.
