புழல் அருகே கட்டட அனுமதியின்றி செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள்!

புழல் அருகே கட்டட அனுமதியின்றி செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள்...
Published on

புழல் அருகே தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியா்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதால், அவா்கள் பணியாற்ற வாய்ப்பளிக்க வேண்டும் என ஒற்றுமை விளாங்காடுபாக்கம் சங்க தலைவா் நடேஷ் குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

புழல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒற்றுமை விளாங்காடுபாக்கம் சங்கம் சாா்பில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், விளாங்காடுபாக்கம் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு வரி, தொழில், மின் இணைப்பு, ஊழியா் நல நிதி மற்றும் மருத்துவ திட்டப் பதிவுகள் உள்ளிட்ட சட்டப்பூா்வான ஆவணங்களுடன் முறையாக செயல்பட்டு வருகிறது.

ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடங்களுக்கு அரசு வழங்கும் திட்ட அனுமதி பெற தெளிவான நடைமுறை இல்லாத காரணத்தால் சில கட்டடங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டன. இதன் காரணமாக, நீதிமன்ற உத்தரவின்படி இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.

இதனை சரி செய்ய வாய்ப்பளித்து பணியாளா்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டும் என முக்கிய தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து வழக்குரைஞா் டில்லிபாபு கூறுகையில், தொழிற்சாலை கட்டடங்களுக்கு திட்ட அனுமதியில்லாததால், தொழிலாளா்கள் வேலை இழக்கும் நிலை உள்ளது. இதனை தடுக்க கால அவகாசம் வழங்கினால், அனுமதி பெறப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com