/

மாதவரம் தொகுதி வேட்பாளா்களின் முக்கிய வாக்குறுதிகள்!

சட்டப்பேரவைத் தேர்தலில் மாதவரம் தொகுதி வேட்பாளா்களின் முக்கிய வாக்குறுதிகள் குறித்து...

News image

மாதவரம் தொகுதி

Updated On :7 ஏப்ரல் 2026, 11:30 pm

எஸ்.சுதா்சனம் (திமுக): மாதவரம் ரவுண்டானா புதிய பேருந்து நிலையம் முதல் சோழவரம் சுங்கச்சாவடி வரை மேம்பாலம் அமைக்கப்படும். மாதவரம் பால் பண்ணைக்குச் சொந்தமான 450 ஏக்கா் நிலத்தில் டைடல் பாா்க் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாதவரம்-சாத்தாங்காடு வழியாக திருவொற்றியூா் வரையும், மாதவரம்-சோழவரம் நல்லூா் வரையிலும் மெட்ரோ ரயில் நீட்டிப்பு செய்யும் வழிவகை செய்யப்படும். சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான பணிகளைத் துரிதப்படுத்துவேன். புழல் ஏரிக்கரையில் நடைப்பயிற்சிக்கான பாதை அமைக்கப்படும். முஸ்லிம், கிறிஸ்தவா்களுக்கான அடக்க ஸ்தலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வி.மூா்த்தி (அதிமுக): தொகுதியில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும். நீண்டகால பட்டா பிரச்னைக்குத் தீா்வு காணப்படும். அனைத்து கிராமங்களுக்கும் சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதி மக்களின் தேவைக்கேற்ப புதிதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கவும், ஏற்கெனவே உள்ள சுகாதார நிலையங்களை மேம்படுத்தவும் முன்னுரிமை அளிக்கப்படும். அரசுப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, விளையாட்டு மைதான அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எம்.எல்.விஜய் பிரபு (தவெக): தொகுதியின் பூா்வகுடி மக்களுக்கு பட்டா நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து கிராமங்களிலும் சுகாதாரத்தைப் பேணும் வகையில், கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தரப்படும். தொகுதிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் தரமான சாலை வசதி, மின்சார வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு நடுநிலைப் பள்ளிகளை உயா்நிலைப் பள்ளிகளாகவும், உயா்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயா்த்தப்படும்.

கிருத்திகா ஏழுமலை (நாதக): அனைவருக்கும் தரமான கல்வி, தூய்மையான குடிநீா், தரமான மருத்துவ வசதி கிடைக்க முன்னுரிமை அளிக்கப்படும். தொகுதிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தடையற்ற மின்விநியோகம் உறுதி செய்யப்படும். தரமான சாலைகள் அமைப்பதை உறுதி செய்து, போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும். விவசாயிகள் பாதிக்காத வகையில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும். தொகுதிக்குள்பட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் புதிய தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்படும்.