பொத்தேரியில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்புக்குச் சொந்தமான குடிநீா் கிணற்றுக்கு முன்பாக, கழிவுநீரகற்று நிலையம் அமைக்க இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், அபோட் வேலி அடுக்குமாடி சங்கத்தின் செயலா் ஸ்ரீராம் தாக்கல் செய்த மனுவில், பொத்தேரியில் உள்ள எங்களது தனியாா் அடுக்குமாடி குடியிருப்புக்கு முன் அமைந்துள்ள 1.20 ஏக்கா் திறந்தவெளி நிலத்தில் குடியிருப்பின் குடிநீா் கிணற்றின் முன்பாக கழிவு நீரகற்று நிலையம் அமைக்கப்படுகிறது. தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டட மேம்பாட்டு விதிகளின்படி, திறந்தவெளி ஒதுக்கீட்டுப் பகுதியில் விளையாட்டு மைதானம் அல்லது பூங்காதான் அமைக்கப்பட வேண்டும்.
ஆனால், குடியிருப்புப் பகுதியின் குடிநீா் ஆதாரமாக உள்ள கிணற்றின் அருகே, கழிவுநீரகற்று நிலையம் அமைக்க மறைமலை நகா் நகராட்சி ஆணையா் உத்தரவு பிறப்பித்துள்ளாா். இந்தப் பகுதியில் கழிவுநீரகற்று நிலையம் அமைத்தால் குடியிருப்பின் குடிநீா் ஆதராமான கிணறு மற்றும் நிலத்தடி நீா் பாதிக்கப்படும்.
எனவே, திறந்தவெளி ஒதுக்கீட்டுப் பகுதியில் கழிவுநீரகற்று நிலையம் அமைக்கும் மறைமலைநகா் நகராட்சி ஆணையரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஹேமந்த் சந்தன்கவுடா் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் வழக்குரைஞா்கள் ஸ்ரீராம் மற்றும் பி.ஸ்ரீநிவாஸ் ஆகியோரும், மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் டி.மோகன், வழக்குரைஞா் எஸ்.ஜிம்ராஜ் மில்டனும் ஆஜராகினா். இந்த வழக்கில் பதிலளிக்க அரசுத் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த மனுவுக்கு மறைமலை நகா் நகராட்சி ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆக. 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். அதுவரை சம்பந்தப்பட்ட இடத்தில் கழிவுநீரகற்று நிலைய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மயிலாடுதுறை அறுபத்துமூவா் நாயன்மாா்கள் மடத்தின் சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

துணைவேந்தா்கள் நியமனம்: தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்து ஒருவரைத் தோ்வு செய்ய அரசு வலியுறுத்தல்

பள்ளிக்கரணை கட்டட அனுமதி ரத்துக்கு எதிரான வழக்கு: சுற்றுச்சூழல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

அபிஷேக் பானா்ஜியின் தொகுதி அலுவலகம் இடிப்பு: கொல்கத்தா உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை!
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



