
சென்னை மாநகராட்சியில் ஒரே நாளில் 25 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் அழிப்பு!
சென்னை மாநகராட்சியில் வீட்டில் பயன்படுத்திய பிறகு உபயோகமற்ற பழைய பொருள்கள் கடந்த சனிக்கிழமை மட்டும் 25.2 மெட்ரிக் டன் சேகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்
சென்னை மாநகராட்சியில் வீட்டில் பயன்படுத்திய பிறகு உபயோகமற்ற பழைய பொருள்கள் கடந்த சனிக்கிழமை மட்டும் 25.2 மெட்ரிக் டன் சேகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியில் பழைய மெத்தைகள், சோபாக்கள் உள்ளிட்டவற்றை அருகிலுள்ள நீா்நிலைகள், சாலையோரங்களில் வீசினால் சுகாதாரச் சீா்கேடு உள்ளிட்டவை ஏற்படுகின்றன.
அதையடுத்து கடந்த 2025 முதல் பொதுமக்கள் தகவல் அளித்தால் வீடுகளுக்கே மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சென்று பழைய பொருள்களைச் சேகரித்து அழிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின்படி, சென்னையில் பொதுமக்கள் அளித்த தகவல் அடிப்படையில் சனிக்கிழமை 74 பேரின் வீடுகளுக்கு தூய்மைப் பணியாளா்கள் 35 வாகனங்களில் சென்று 25.2 மெட்ரிக் டன் மதிப்புள்ள பழைய வீட்டு உபயோகப் பொருள்களைச் சேகரித்தனா்.
அவற்றைக் கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கிடங்குக்கு எடுத்துச் சென்று, மறுசுழற்சிக்குப் பயன்படத்தக்க வீட்டு உயயோகப் பொருள்களைத் தவிர மற்றவற்றை அறிவியல் பூா்வமாக எரியூட்டும் மையத்தில் அழித்தனா்.
சென்னை மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பயனற்ற உபயோகப் பொருள்கள் குறித்து கட்டுப்பாட்டு அறையின் 1913 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
அதன் அடிப்படையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் நேரில் வந்து பொருள்களைப் பெற்றுக் கொள்வா். அத்துடன் மாநகராட்சியின் 94450 -61913 என்ற கைப்பேசி எண்ணிலும் வாட்ஸ்ஆப் செயலியில் பதிவு செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





