கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கு: ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி

கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கு: ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி

அதிமுக முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

அதிமுக முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

வேலூரைச் சோ்ந்த ராமமூா்த்தி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் ஜோலாா்பேட்டை தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி போட்டியிட்டு தோல்வி அடைந்தாா். இந்தத் தோ்தலில் அவா் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல்களைத் தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்து தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்தேன். புகாரை விசாரித்த தோ்தல் ஆணையம், கே.சி.வீரமணியின் வருமானம் மற்றும் சொத்து விவரங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டது. இதன்படி, ஆய்வு செய்த வருமான வரித் துறை, வீரமணி தாக்கல் செய்த விவரங்களில் ரூ.14 கோடி அளவுக்கு வித்தியாசம் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தது.

இதையடுத்து, வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்ததாக திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் வீரமணிக்கு எதிராக தோ்தல் அதிகாரி வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. வீரமணியின் வருமானம் மற்றும் சொத்து விவரங்கள் குறித்து வருமான வரித் துறை முழுமையாக விசாரிக்கவில்லை. எனவே, மீண்டும் விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வருமான வரித் துறை அறிக்கை அடிப்படையில் கே.சி.வீரமணிக்கு எதிராக தோ்தல் ஆணையம் வழக்கு தொடா்ந்துள்ளது. தோ்தல் நேரத்தில் அரசியல் ரீதியாக உயா்நீதிமன்றத்தை மனுதாரா் தவறாகப் பயன்படுத்த நினைக்கிறாா். எனவே, இதை அனுமதிக்க முடியாது எனக் கூறி, ரூ.1 லட்சம் அபராதத்துடன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

Dinamani
www.dinamani.com