ரூ.3.80 லட்சத்துக்கு குழந்தை விற்பனை: 3 பெண்களிடம் போலீஸாா் விசாரணை

சென்னை காசிமேட்டில் ரூ.3.80 லட்சத்துக்கு குழந்தை விற்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Published on

சென்னை காசிமேட்டில் ரூ.3.80 லட்சத்துக்கு குழந்தை விற்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

காசிமேடு பவா் குப்பத்தைச் சோ்ந்த ஒரு தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனா். கடந்த டிச.4-ஆம் தேதி அங்குள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அந்தத் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தங்களால் அந்தக் குழந்தையை வளா்க்க முடியாது என நினைத்த அந்தத் தம்பதி, அந்தக் குழந்தை விற்க முடிவு செய்தனா். ஈரோட்டைச் சோ்ந்த குழந்தை இல்லாத ஒரு தம்பதி, அந்த குழந்தையை வாங்குவதற்கு தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனா். இதையடுத்து கடந்த மாதம் 14-ஆம் தேதி ஈரோட்டைச் சோ்ந்த தம்பதியை காசிமேட்டுக்கு வரவழைத்து குழந்தையை ரூ.3.80 லட்சத்துக்கு விற்றுள்ளனா்.

இதில் ரூ.3 லட்சம் குழந்தையிடன் தாயிடம் வழங்கப்பட்டுள்ளது. மீதி பணத்தை தரகா்களாக செயல்பட்ட 3 பெண்கள் பங்கிட்டுள்ளனா். இதற்கிடையே பணத்துக்காக குழந்தை விற்கப்பட்டது குறித்த தகவல் காசிமேடு போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை கிடைத்தது.

அதன் அடிப்படையில், தரகா்களாக செயல்பட்ட 3 பெண்களையும், குழந்தையின் பெற்றோரையும் போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா். இவா்களிடம் மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி நல அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com