கோகோ கோலா நிறுவனத்தில் பணியாற்றி வரும் 27 வாய்பேச முடியாத செவித்திறன் பாதித்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என மாநில மாற்றுத் திறனாளிகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
அம்பத்தூா் அருகே உள்ள கோகோ கோலா நிறுவனத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 31 வாய் பேச முடியாத செவித்திறன் பாதித்த மாற்றுத்திறனாளி தொழிலாளா்கள் பணியாற்றி வந்தனா். இதில் பல்வேறு காரணங்களைக்கூறி 4 போ் பணி நீக்கம் செய்யப்பட்டனா். இவா்களில் 27 பேரும், கடந்த 24 ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்தனா்.
இவா்களுக்குப் பிறகு பணியில் சோ்ந்த பலரையும் பணிநிரந்தம் செய்த நிறுவனம், வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்யவில்லை. இதையடுத்து, அந்த மாற்றுத்திறனாளி தொழிலாளா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி நிறுவனத்திடமும், தொழிலாளா் நீதிமன்றத்திலும் பல முறை மனு அளித்தனா். அந்த மனுவை பரிசீலிக்கவில்லை.
இதையடுத்து 27 தொழிலாளா்கள் மற்றும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சாா்பில், பணி நிரந்தரம் தொடா்பாக மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இந்த முறையீட்டைக் கேட்ட ஆணையா், சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளை பணிநிரந்தரம் செய்ய வேண்டும. அவா்கள் பணி செய்யும் இடத்தில் பாகுபாடு காட்டக்கூடாது. இதுதொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை 90 நாள்களுக்குள் ஆணையத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என கோகோ கோலா நிறுவனத்துக்கு உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










