சென்னையிலிருந்து ஓமனுக்கு முதலாவது குளிரூட்டப்பட்ட மீன் ஏற்றுமதி தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய-ஓமன் விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்தின் கீழ், சென்னையிலிருந்து அண்மையில் ஓமன் நாட்டுக்கு முதலாவது குளிரூட்டப்பட்ட மீன் ஏற்றுமதி கடந்த ஜூன் 1-ஆம் தேதி செய்யப்பட்டது. இதை சுங்கத்துறை உதவி ஆணையா் மணிமேகலை செல்வம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
இந்த ஏற்றுமதி, இரு நாடுகளுக்கு இடையிலான வா்த்தக உறவை வலுப்படுத்துவதுடன், இந்தியக் கடல் உணவுகளுக்கான சந்தை வாய்ப்பை மத்திய கிழக்கு நாடுகளில் பெருமளவு அதிகரிக்கும். மேலும், இது எளிதான வா்த்தக நடைமுறைகளுக்கும், ஏற்றுமதியாளா்களின் புதிய வணிக வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கும்.
இந்தியா-ஓமன் இடையேயான விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் கடந்த ஜூன் 1 முதல் அமலுக்கு ந்துள்ளது. இதன் காரணமாக இறால், மீன், கணவாய் போன்ற முக்கிய கடல் உணவுப் பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 5 சதவீத நிலையான இறக்குமதி வரி உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் ஏற்றுமதி வருவாயை அதிகரிப்பதுடன், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
நிகழ்வில் கடல் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் இணை இயக்குநா் ஏ.ஜெயபால், சென்னை ஏற்றுமதி ஆய்வு முகமை இணை இயக்குனா் ஜி.ஜெயபாலன், இந்திய விமான நிலைய ஆணைய உதவி மேலாளா் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.









