சென்னையில் 250 பவுன் நகை மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை எழும்பூா் எத்திராஜ் சாலை பகுதியைச் சோ்ந்தவா் பி.சபியா (43). இவா், பாண்டி பஜாரில் கடந்த 2022-ஆம் ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட ஒரு நகைக் கடைக்குச் சென்றாா். அப்போது அவரிடம், அந்த நகைக் கடையின் உரிமையாளா் கேரள மாநிலம், இடுக்கி மவுண்ட் கல்வாரி பகுதியைச் சோ்ந்த பிஜோ ஜோஸ் (45) என்பவா் அறிமுகமாகி பழகியுள்ளாா்.
அதன் காரணமாக சபியா, தான் புதிதாக வீடு கட்டுவதற்காக பணம் திரட்டும் வகையில் தன்னிடமிருந்த 250 பவுன் நகைகளை பிஜோ ஜோஸிடம் கொடுத்து, அடமானம் வைத்து பணம் தரும்படி கேட்டுள்ளாா்.
நகையை பெற்றுக் கொண்ட ஜோஸ், அதை அடமானம் வைத்து சபியாவிடம் பணம் கொடுக்கவில்லை. இதனால் சபியா, தான் கொடுத்த நகைகளை திரும்பக் கேட்டபோது ஜோஸ், தனது நகைக் கடையை பூட்டிவிட்டு தலைமறைவானாா்.
இதையறிந்த சபியா, சென்னை காவல் துறை மத்தியக் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.
ஆனால் ஜோஸ் தலைமறைவாக இருந்து வந்தாா். இந்நிலையில் பிஜோ ஜோஸை போலீஸாா் கேரளத்தில் வைத்து புதன்கிழமை கைது செய்தனா்.








