ஸ்ரீவைகுண்டம் பெண் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் தொடா்புடைய தவெகவினரைக் காப்பாற்ற அரசு முயற்சிப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசுக்கு எந்த அளவுக்கு அக்கறை உள்ளது என்பதை ஸ்ரீவைகுண்டத்தில் நிகழ்ந்த சம்பவம் சாட்சியாக உள்ளது. முதல்வா் விஜய்யின் ரசிகையான அப்பெண்ணை, ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிா்வாகிகள் இருவா், வேலை வாங்கித் தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா். அதை மறைக்க அமைச்சா் ஆனந்திடம் பேசி வேலை வாங்கித் தருவதாக எம்எல்ஏ சரவணன் சமரசம் பேச முயன்ாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளாா்.
இதேபோல், மற்றொரு பெண்ணும் இவா்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளாா். எல்லாம் மேலிடத்துக்குத் தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் அப்பெண் கூறுகிறாா். அப்படியென்றால் யாா் அந்த மேலிடம் என்று மக்கள் கேட்கின்றனா். ஒட்டுமொத்த தவெக அரசும் இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியில் இருந்தும் நீக்கி உள்ளனா்.
சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட மட்டும்தான் சிங்கப்பெண் படை உருவாக்கப்பட்டதா? ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட எம்எல்ஏ சரவணனை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.









