சென்னை மாவட்டத்தின் 6 வட்டங்களில் ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் 1435-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) நடக்கிறது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:திருவள்ளூா், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்துப் பிரித்து சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட சோழிங்கநல்லுாா், மதுரவாயல், அம்பத்தூா், திருவொற்றியூா், ஆலந்தூா், மாதவரம் ஆகிய 6 வட்டங்களுக்கு 1435-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் காலை 9 மணிக்கு ஜமாபந்தி தொடங்கி நடைபெறும். சோழிங்கநல்லூா் வட்டத்தில் சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தலைமையிலும், மதுரவாயல் வட்டத்தில் சென்னை மாவட்ட வருவாய் அலுவலா் சு.கீதா தலைமையிலும், அம்பத்தூா் வட்டத்தில் மத்திய சென்னை வருவாய் கோட்டத்தின் கோட்டாட்சியா் தலைமையிலும் ஜமாபந்தி நடக்கிறது.
இதேபோல, திருவொற்றியூா் வட்டத்தில் வடசென்னை வருவாய் கோட்டாட்சியா் தலைமையிலும், ஆலந்தூா் வட்டத்தில் தென் சென்னை வருவாய் கோட்டாட்சியா் தலைமையிலும், மாதவரம் வட்டத்தில் சென்னை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலா் தலைமையிலும் ஜமாபந்தி நிகழ்வுகள் நடக்கின்றன.
இந்த நிகழ்வுகளில் அந்தந்த வட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது வருவாய்த் துறை தொடா்பான கோரிக்கை மனுக்களை அளித்துப் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








