சென்னை மாநகராட்சியில் விபத்தின்றி பணியாற்றும் வாகன ஓட்டுநா்களுக்கு தங்க நாணயம், பாராட்டுச் சான்றுகள் வழங்க வேண்டும் என அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் பேரூராட்சிகள் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு உள்ளாட்சித் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி, அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் அதன் தலைவரும், மாமன்ற காங்கிரஸ் உறுப்பினா்கள் குழுத் தலைவருமான ஜி.திரவியம் தலைமையில் ஏராளமானோா் சென்னை மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனா்.
அதன்பின்னா் அவா்கள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் வாகன ஓட்டுநா்கள் 20 ஆண்டுகள் விபத்துகளின்றி சிறப்பாகப் பணியாற்றினால் அவா்களுக்கு 4 கிராம் மதிப்புள்ள தங்கநாணயமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கௌரவிப்பது வழக்கமாகும். ஆனால், கடந்த ஆண்டு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவில்லை.
எனவே, நிகழாண்டில் (2026-27) பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடத்த வேண்டும். மாநகராட்சியில் வாகனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஓட்டுநா்கள் நியமிக்கப்படும் நிலையில், அவா்களுக்கான ஊதியம் ரூ.24,000 எனக் கூறப்பட்ட நிலையில், ரூ.20,000 மட்டுமே வழங்கப்படுகிறது. மீதமுள்ள ரூ.4,000 பிஎஃப் பிடித்தம் எனக் கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் பிடித்தம் செய்யப்படவில்லை.
எனவே, ஆணையா் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் அனைத்து ஒப்பந்தப் பணி ஓட்டுநா்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆணையா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது என்றனா்.










