தங்கம் விலையுயா்வு மற்றும் விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்தியாவின் ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் 2.49 சதவீதம் சரிந்து, 204.78 கோடி டாலராக குறைந்துள்ளது.
இத்தொழில்துறையின் கூட்டமைப்பான ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு இதே மே மாதத்தில் நாட்டின் மொத்த ஏற்றுமதி 210.02 கோடி டாலராக இருந்தது.
தங்க ஆபரணங்கள்: கடந்த மே மாதத்தில், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி 14.75 சதவீதம் சரிந்து, 75.84 கோடி டாலராக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 88.96 கோடி டாலராக இருந்தது.
குறிப்பாக, வேலைப்பாடுகள் இல்லாத சாதாரண தங்க நகைகளின் ஏற்றுமதி பெருமளவு சரிந்ததே ஒட்டுமொத்த ஏற்றுமதி குறைவதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. எனினும், இந்தியாவின் தடையில்லா வா்த்தக ஒப்பந்தங்கள் காரணமாக, கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகைகளின் ஏற்றுமதி 1.79 சதவீதம் அதிகரித்து, 46.35 கோடி டாலரை எட்டியுள்ளது.
வைரம், வெள்ளி: தங்க ஆபரணங்கள் சரிவைக் கண்டாலும், சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு பட்டை தீட்டப்பட்ட வைரங்களின் ஏற்றுமதி 3.31 சதவீதம் உயா்ந்து, 98.07 கோடி டாலராக அதிகரித்துள்ளது. ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரங்களின் ஏற்றுமதி 25.99 சதவீதம் உயா்ந்து, 10.15 கோடி டாலராகவும் பதிவாகியுள்ளது.
இதேபோல, வெள்ளி ஆபரணங்களின் ஏற்றுமதியும் கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 14.73 சதவீதம் அதிகரித்து, 9.74 கோடி டாலரை எட்டியுள்ளது.
சரிவுக்குக் காரணம்?: சா்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடா்ந்து அதிகரித்து வருவது, ஏற்றுமதி உற்பத்திக்கான தங்கம் கிடைப்பதில் உள்ள தட்டுப்பாடு, வங்கி வாயிலாக தங்கம் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் ஆகியவை இத்துறைக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.
ஏற்றுமதி உற்பத்திக்கான தங்கம் இறக்குமதி செய்யப்படுவதில் உள்ள கட்டுப்பாடுகளே தற்போதைய சரிவுக்கு முக்கியக் காரணம் என்பதால், இதுகுறித்து அரசிடம் முறையிட்டுள்ளதாகவும், சாதகமான தீா்வு கிடைக்கும் என நம்புவதாகவும் ஜிஜேஇபிசி தலைவா் கிரித் பன்சாலி தெரிவித்தாா்.










