பராமரிப்புப் பணிகள் காரணமாக புகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பயணிகள் கூட்டம் அலைமோதியது.
புகா் மின்சார ரயில்கள் சென்னை சென்ட்ரல், கடற்கரை நிலையங்களில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திருவள்ளூா், அரக்கோணம் வரை, தாம்பரம், செங்கல்பட்டு வரை மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 500-க்கும் மேற்பட்ட முறை ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் லட்சக்கணக்கானோா் தினமும் பயணித்து வருகின்றனா்.
இந்நிலையில், அரக்கோணம் ரயில் நிலைய பணிமனையில் தண்டவாளம், தொழில்நுட்பம் மற்றும் கடவுப் பாதை சீரமைப்பு பணிகள் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால், புகா் மின்சார ரயில்கள் சேவை எண்ணிக்கையை சென்னை ரயில்வே கோட்டம் குறைத்துவிட்டது. மேலும் அரக்கோணம் செல்லும் ரயில்கள் திருவாலங்காடு நிலையத்துடன் நிறுத்தப்பட்டு இயக்கப்படுகின்றன. பல ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) மட்டும் 40-க்கும் மேற்பட்ட புகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 40-க்கும் மேற்பட்ட ரயில்கள் திருவாலங்காடு வரையும் இயக்கப்பட்டன.
இதனால், ஞாயிற்றுக்கிழமை சென்னை சென்ட்ரல் புகா் மின்சார ரயில்கள் இயங்கும் மூா் மாா்க்கெட் வளாகத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், ரயில்வே பாதுகாப்புப் படையினா் விரைந்து செயல்பட்டு ரயில்களில் பயணிகள் ஏறுவதை வரிசைப்படி முறைப்படுத்தினா். மேலும், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










